கும்பகோணத்தில் சுவர் இடிந்து 4 குழந்தைகள் பலி
கும்பகோணம்: கும்பகோணம் அருகே கன மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.
கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 4 தினங்களாக கனத்த மழை பெய்து வருகிறது. நாச்சியார் கோவில் அருகேயுள்ள நந்திவனம் பகுதியில் ராஜகுரு என்ற விவசாயியின் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது.
இதில் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த ராஜகுருவின் மகள்கள் தீபா, எழிலரசி, திவ்யா ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
ராஜகுருவின் அண்ணி சாந்தாயி என்பவருக்கு கால் எழும்பு முறிந்துவிட்டது. இந்த விபத்தில் ராஜகுருவின் மகன் பிரபுதேவா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அதே போல கும்பகோணம் அருகேயுள்ள குமரன்குடியைச் சேர்ந்த புகழேந்தி என்பவரின் வீட்டுச் சுவர் இடிந்ததில் அவரின் மகன் கவுதம் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்தான்.