கன்னியாகுமரியில் கடும் கடல் சீற்றம்-வீடுகள் இடிந்தன
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிரமடைந்து வரும் பருவ மழையால் கடல் சீற்றமும் அதிகரித்துள்ளது. இதில் கடலோரத்தில் 4 வீடுகள் இடிந்ததுடன், கடற்கரை சாலைகளும் துண்டிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகின்றன.
மேலும் குழித்துறை தாமிரபரணியாறு, பரளியாறு, பழையாறு ஆகிய ஆறுகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் உள்ள குளங்கள் நிரம்பி வழிகின்றன.
இந்நிலையில் தற்போது நிரம்பியுள்ள அணைகள் திறக்கப்பட்டதால் வாழையத்துவயல் உளளிட்ட இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியின் ஆழ்கடல் பகுதியில் பருவ நிலையிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடல் பகுதியிலும் கடுமையான மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக குமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை பகுதியில் ராமன்துறை, முள்ளூர்துறை, இணையம், தேங்காப்பட்டணம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இதனால் கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. அதிக வேகத்துடன் ஆக்ரோஷமாக வரும் அலைகள் கடலரிப்பு தடுப்பு சுவரை தாண்டி வருகிறது. இதனால் கடலோரப்பகுதியில் கட்டப்பட்டுள்ள கடலரிப்பு தடுப்புச் சுவர் முழுமையாக சேதமடைந்துள்ளது.
இந்த கடல் சீற்றத்தால் கடற்கரைப் பகுதியில் உள்ள 3 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்தன. கவிதா என்பவரின் வீட்டு கம்பவுண்ட் சுவரை கடலே இழுத்து சென்றது. ராமன்துறை பகுதியிலும் மேலும் பல வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால் அப்பகுதி மீனவர்கள் பீதியில் உள்ளனர்.
இதற்கிடையே தொடர்ந்து கடுமையான காற்று வீசி வருவதால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. குமரி மாவட்டத்தில் ராமன்துறை பகுதியில் உள்ள மேற்குக் கடற்கரை சாலை துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.