மழைக்கு பலியானோர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம்-அரசு
சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழைக்கு பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண தொகை அளிக்கப்படும் என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. வங்கக்கடலில் குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் புயல் சின்னம் உருவாகியது.
இதனால் தமிழகத்தில் சென்னை, புதுச்சேரி உட்பட கடலோரப்பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்த கனமழைக்கு தமிழகம் முழுவதும் இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர். மழைக்கு பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது,
தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000 தமிழக அரசு வழங்கி வந்தது. ஆனால் தற்போது இந்த நிவாரணத் தொகையை குடும்பத்திற்கு ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.