இலங்கை சுனாமி குடியிருப்பில் ராணுவம் குண்டுவீச்சு
முல்லைத்தீவு: இலங்கையின் முல்லைத் தீவு மாவட்டத்தில், சுனாமிக் குடியிருப்புகள் மீது இலங்கை விமானப்படை குண்டு வீசித் தாக்கியது. இதில் 2 தமிழ் இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.
முல்லைத் தீவு மாவட்டம் தீர்த்தக்கரை என்ற கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்கு மொத்தம் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன.
இங்கு விமானப்படை வீரர்கள் திடீரென கேபிர் ரக விமானங்கள் மூலம் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் 3 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. 2 இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.
உலக உணவுத் திட்டத்தின் கீழ் இந்த சுனாமிக் குடியிருப்புகள் அமைக்கப்பட்டு இங்கு சுனாமியால் வீடுகளை இழந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் இலங்கை விமானப்படை குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குண்டு வீச்சில் ரூபன் (18), சஜீவன் (20) ஆகிய இருவர் படுகாயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தமிழீழ போலீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
மொத்தம் 8 குண்டுகள் வீசப்பட்டதாக தெரிய வந்துள்ளது.