கன்னியாகுமரியில் ஏராளமான ரப்பர் மரங்கள் சேதம்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழைக்கு பலியான 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 50,000 நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில மழை வெள்ள சேதங்கள் குறித்து ஆய்வு நடத்திய தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் கூறுகையில்,
மழை தொடர்ந்து பெய்து வருவதால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரணம் வழங்குமாறு முதல்வர் கூறியுள்ளார். குமரி மாவட்டத்தை பொறுத்தளவு பெரியளவில் இதுவரை பாதிப்புகள் இல்லாமல் இருந்தாலும் தொடர்ந்து மழை பெய்ந்து வருவதால் மேலும் பாதிப்புகள் ஏற்படாதவாறு அனைவரும் உஷார் நிலையில் இருக்க வேண்டும்.
மழையால் உயிரிழந்த 3 பேர் குடும்பத்திற்கு நிவாரண உதவிகள் உடனே வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நமது மாவட்டத்தில் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, என்பதை கேட்டறிந்தார்.
பத்மனாபபுரம் தொகுதியில் சங்கரன்காவு என்ற இடத்தில் 2 வீடுகளும், கிள்ளியூர் வேங்கோடு பகுதியில் ஏராளான வாழை மரங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
மேலும் திக்குறிச்சி, வெள்ளிக்கோடு, பாரதப்பள்ளி, பேச்சிப்பாறை பகுதியில் 800 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள ரப்பர் பால் வெட்டும் மரங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மாவட்டத்தில் பெரிய பாதிப்புகள் இருந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications