கட்டாய திருமண பதிவு-முஸ்லீம் லீக் வரவேற்பு
சென்னை: அனைத்து மதத்தினரும் திருமணங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரவேற்றுள்ளது.
அக் கட்சியின் தலைவரும் எம்பியுமான காதர் மொய்தீன் விடுத்துள்ள அறிக்கையில், நாட்டில் உள்ள அனைத்து மதங்களை சேர்ந்தவர்களின் திருமணங்களும் பதிவு செய்யப்பட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருட்டு திருமணம், பால்ய திருமணம், வாரிசு உரிமை, சொத்துரிமை உள்ளிட்டவற்றில் எவ்வித சர்ச்சையும் ஏற்படாமல் இருக்க திருமண பதிவு நிச்சயம் உதவும்.
இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடந்த பல ஆண்டுகளாக பிரச்சாரம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களை மையமாக கொண்டு இயங்கும் முஸ்லிம் அமைப்புகளான ஜமாத்துகள் திருமண பதிவு மையங்களாக விளங்குகின்றன.
தமிழகத்தில் உள்ள 11,000க்கும் மேலான ஜமாத்துக்களில் திருமணம் முறைப்படி பதிவு செய்யப்படுகிறது. இந்த முறையை பின்பற்றாமல் போட்டி ஜமாத்துக்களில், தர்ஹாக்களில் மறைமுக திருமணம் நடத்தி வைத்து வருபவர்களை தொடர்ந்து கண்டித்து வருகிறோம்.
உச்சநீதிமன்ற ஆணையை நாங்கள் முழு மனதுடன் வரவேற்கிறோம். இந்த ஆணை குறித்து 3 மாத காலத்தில் தமிழக அரசு விதிமுறைகளை அறிவிக்க உள்ளது. அப்போது முஸ்லிம் திருமணப் பதிவு பற்றிய விவரங்களை சேர்க்கும்போது அந்த சமுதாயத்தின் நடைமுறைகளை உன்னிப்பாக கவனித்து சேர்க்க வேண்டும்.
பல மாவட்டங்களில் ஹாஜிக்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். அவர்களை உடனடியாக நியமித்து திருமண பதிவு அதிகாரியாக அடையாளம் கட்ட வேண்டும். முஸ்லிம் திருமணங்கள் அனைத்தும் பதிவு பெற்றே நடக்கின்றன.
ஆனால் தமிழகம் அல்லாத வேறு மாநிலங்களில் ஹாஜிகள் சட்டம் அமுலில் இல்லாததால் முஸ்லிம் திருமண பதிவுகளில் ஒரே சீரான நிலை இல்லாதது போல் தோன்றுகிறது. எனவே மத்திய அரசு ஹாஜிகள் சட்டத்தை நாடு முழுவதும் பொருத்துமாறு சட்டமாக்க வேண்டும். இதற்கான முயற்சியை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மேற்கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications