கூட்டணி?: சரத்குமார்-கார்த்திக் திடீர் சந்திப்பு!
மதுரை: மதுரையில் நடிகர் கார்த்திக்கும், நடிகர் சரத்குமாரும் தனியே சந்தித்துப் பேசினர். கூட்டணி குறித்து இருவரும் பேசியதாகக் கருதப்படுகிறது.
தேவர் நூற்றாண்டு விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் நடிகர் கார்த்திக் மற்றும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் வந்திருந்தனர்.
இந் நிலையில் மதுரையில் ஹோட்டலில் கார்த்திக்கை, நடிகர் சரத்குமார் திடீரென சந்தித்தார். இருவரும் சுமார் 1 மணி நேரம் தனியாக ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பு குறித்து இருவரும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். ஆனாலும் கூட்டணி அமைப்பது குறித்தே இருவரும் பேசியதாகத் தெரிகிறது.
இதற்கிடையே நேற்றிரவு மதுரை நேதாஜி ரோட்டில் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நூற்றாண்டு ஜெயந்தி விழா பொதுக்கூட்டத்தில் கார்த்திக் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏகப்பட்ட கூட்டம் கூடிவிட்ட நிலையில், கடைசி நேரத்தில் கார்த்திக் வரவில்லை.
இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. கார்த்திக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்று நிர்வாகிகள் அறிவித்ததையடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் கோஷம் போட்டபடி கலாட்டாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் தலையிட்டு அவர்களை கலைந்து போகச் செய்தனர். கடைசி நேரத்தில் கார்த்திக் காலை வாருவது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications