துபாய் சிறையில் வாடும் 4000 இந்தியத் தொழிலாளர்கள்
துபாய்: ஊதிய உயர்வு கோரி போராட்டம் நடத்திய 4000 இந்தியத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு துபாய் சிறையில் வாடி வருகின்றனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் ராஜஸ்தான், பஞ்சாப், ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாயின், ஜெபல் அலி தொழிற்பேட்டை பகுதியில், கடந்த வார இறுதியில் சரியான ஊதியம் தராதது, அடிப்படை வசதி இல்லாதது, குடிநீர் பற்றாக்குறை, தங்குமிடத்தில் உள்ள குறைபாடுகள் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி அவர்கள் பெரும் போராட்டத்தில் குதித்தனர்.
அப்போது வன்முறை மூண்டது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் 4000 பேர் இந்தியத் தொழிலாளர்கள். சிலர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இதுகுறித்து இந்தியத் தூதரக அதிகாரி பி.எஸ்.முபாரக் கூறுகையில், துபாய் சிறையில் 4000 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாரையும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
சிறை அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளுடன் பேசியுள்ளோம். மீண்டும் வேலைநிறுத்தம் போன்ற போராட்டங்களில் ஈடுபட மாட்டோம் என்று தொழிலாளர்கள் உறுதியளித்தால், மீண்டும் தொழிலாளர்களை வேலைக்குத் திருப்பி அனுப்ப அதிகாரிகள் சம்மதித்துள்ளனர். அதேசமயம் இந்தியா திரும்ப விரும்புபவர்கள் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றார் அவர்.
தொழிலாளர்கள் கோரிக்கை குறித்து பிரவாசிபந்து அமைப்பின் தலைவர் கே.வி.சம்சுதீன் கூறுகையில், வீட்டு வேலை பார்க்கும் பெண்களுக்கான ஊதியத்தை உயர்த்தியது போல, பிற தொழிலாளர்களுக்கும் ஊதியத்தை உயர்த்துவது குறித்து வளைகுடா நாடுகளின் அரசுகளுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications