பொது இடத்தில் தம் அடித்த எச்சூரி!
டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் எச்சூரி, கேரளாவில் பொது இடத்தில் புகை பிடித்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில், சமீபத்தில் கருத்தரங்கம் ஒன்று நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் எச்சூரி கலந்து கொண்டு பேசினார்.
கருத்தரங்கின் இடையே அவர் வெளியில் வந்து புகை பிடித்துள்ளார். இது பத்திரிக்கைகளில் புகைப்படமாக வெளியாகியுள்ளது.
பொது இடத்தில் புகை பிடிக்க கேரளாவில் தடை உள்ளது. இப்படிப்பட்ட தடையை விதித்த முதல் மாநிலமே கேரளாதான். இந்த நிலையில் பொது இடத்தில் எச்சூரி புகை பிடித்த விவகாரம் சர்ச்சையை எழுப்பி விட்டது.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தர்மசங்கடத்தில் மூழ்கியுள்ளது.
ஏற்கனவே பொது இடத்தில் புகை பிடித்தது தொடர்பாக சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சன், ஷாருக்கான் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எச்சூரி மீதும் வழக்கு பாயுமா என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.