மாஜிஸ்திரேட்டுக்கு அடி- வக்கீல்கள் மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டை வக்கீல்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் அவர் மீது எச்சிலை உமிழ்ந்தும், குடும்பத்தைப் பற்றி அவதூறாகப் பேசியும் அசிங்கப்படுத்தினர். இதுதொடர்பாக வக்கீல்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
எழும்பூர் 5வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டாக இருப்பவர் முருகானந்தம். நேற்று மாலை இவரது கோர்ட்டில், திருட்டு வழக்கில் கைதான நான்கு பெண்களின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.
அந்தப் பெண்களின் சார்பில் இளங்கோ மற்றும் தங்கத்துரை ஆகிய இரு வக்கீல்கள் ஆஜராகி ஜாமீன் கோரி வாதாடினர். ஆனால் மாஜிஸ்திரேட் முருகானந்தம் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த 2 வக்கீல்களும் மாஜிஸ்திரேட்டை சரமாரியாக திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து முருகானந்தம் அங்கிருந்து எழுந்து தனது அறைக்குப் போய் விட்டார்.
ஆனாலும் விடாத வக்கீல்கள், அங்கிருந்து முருகானந்தம் அறைக்குச் சென்றனர். அவர்களுடன் மேலும் பல வக்கீல்கள் சென்றனர். அங்கு முருகானந்தத்தை வக்கீல்கள் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ரத்தம் சொட்டச் சொட்ட முருகானந்தம் தனது அறையிலிருந்து வெளியேறினார். நேராக தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் ராமராஜின் அறைக்குச் சென்று அவரிடம் புகார் கொடுத்தார்.
தகவல் அறிந்ததும் போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். மாஜிஸ்திரேட் முருகானந்தம், நீதிமன்றத்தில் பணியில் இருந்த போலீஸார், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் தலைமை மாஜிஸ்திரேட் ராமராஜும், முருகானந்தமும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவை சந்தித்து புகார் கொடுத்தனர். இதேபோல வக்கீல்கள் தரப்பிலும் தலைமை நீதிபதியிடம் புகார் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் தன்னை தாக்கிய வக்கீல்கள் மீது நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று கோரி மாஜிஸ்திரேட் முருகானந்தம் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் தங்கத்துரை, இளங்கோ உள்ளிட்ட 20 வக்கீல்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
மாஜிஸ்திரேட் முருகானந்தம் தனது புகாரில், நான்கு பெண்களையும் நான் ஜாமீனில் விட மறுத்ததால் ஆத்திரமடைந்த வக்கீல்கள் இளங்ேகா, தங்கத்துரை ஆகிய இருவரும் என்னை அறுவெறுக்கத்தக்க வார்த்தைகளால் திட்டினர்.
இதனால் நான் எனது அறைக்குப் போய் விட்டேன். ஆனால் என்னைப் பின் தொடர்ந்து அங்கு வந்த வக்கீல்களும், அவர்களுக்குத் துணையாக மேலும் பல வக்கீல்களும் கோர்ட் உதவியாளர் பாலகிருஷ்ணன், பாதுகாப்பு போலீஸ்காரர் ராஜா ஆகியோரைத் தாக்கி விட்டு உள்ளே புகுந்து என்னைத் தாக்கினர்.
எனது முகத்தில் எச்சிலை உமிழ்ந்தும், சரமாரியாக அடித்தும், எனது குடும்பத்தைப் பற்றி தகாத வார்த்தைகளால் விமர்சித்தும் கீழே தள்ளினார்கள். என்னைக் கொலை செய்வதாகவும் மிரட்டினர்.
அவர்கள் என்னைத் தாக்கியதில் உதட்டிலும், வாயிலிருந்தும் ரத்தம் கொட்டியது. இடது முழங்கையிலும் ரத்தக் காயம் ஏற்பட்டது என்று கூறியிருந்தார்.
இந்த சம்பவம் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications