உரிமை மீறல் பிரச்சினை: ஜெவுக்கு நோட்டீஸ்
சென்னை: உரிமை மீறல் பிரச்சினை தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விளக்கம் அளிக்குமாறு கூறி அவருக்கு சட்டசபை உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமீபத்தில் ஜெயலலிதா அளித்த ஒரு பேட்டியில், அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னைக் கொல்ல சதி செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து சமீபத்தில் நடந்த சட்டசபையின் மழைக் காலக் கூட்டத் தொடரின்போது ஜெயலலிதா மீது அமைச்சர் ஸ்டாலின் உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பினார்.
இந்தப் பிரச்சினையை உரிமைக் குழுவுக்கு அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் சபாநாயகருக்குக் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற சபாநாயகர் ஆவுடையப்பன், உரிமைக் குழுவுக்கு அதை அனுப்பி வைத்தார்.
துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி தலைமையிலான உரிமைக் குழு கூடி இதுதொடர்பாக விவாதித்தது. விவாதத்தின் இறுதியில், ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க உரிமைக் குழு தீர்மானித்தது.
அதன்படி ஜெயலலிதாவுக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் இந்த விவகாரம் தொடர்பாக நேரிலோ அல்லது உரிய முறையிலோ விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எதிர்த்து ஜெயலலிதா மனு:
இதற்கிடையில் சட்டசபை உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து ஜெயலலிதா இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று தெரிகின்றது.