கோவை குண்டுவெடிப்பு கைதி சிறையில் திடீர் மரணம்
கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சபுர் ரஹ்மான் என்பவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சபுர் ரஹ்மான் (38). இவருக்கு கடந்த 24ம் தேதி ஆயுள் தண்டனை மற்றும் 17 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.
நேற்று இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார்.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த நிலையில், ரஹ்மான் உயிரிழந்தார்.
உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு:
அவரது உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை ரஹ்மானின் உறவினர்கள், நூற்றுக்கணக்கான தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக தொண்டர்கள் அங்கு குவிந்தனர்.
சிறை டாக்டரின் அலட்சியத்தால்தான் ரஹ்மான் உயிரிழந்துள்ளார். அவரைக் கைது செய்ய வேண்டும். ரஹ்மான் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அதுவரை உடலைப் பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறி போராட்டம் நடத்தினர்.
இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து அவர்களை சமாதனப்படுத்தினர். அதன் பின்னர் ரஹ்மானின் உடலை அவரது உறவினர்களும், தமுமுகவினரும் பெற்றுச் சென்றனர். இதனால் பதட்டம் தணிந்தது.