சென்னை விமான நிலையத்தில் வைரங்கள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாங்காக்கில் இருந்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட வைரங்களை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த நந்தகோபால் (38)என்பவர் பாங்காக்கில் இருந்து சென்னைக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் வந்தார். இவர் தனது கையில் வைத்திருந்த 2 பெட்டிகளுடன் கிரீன் வே மூலம் வெளியேற முயன்றார்.
அவரின் அவசரத்தை பார்த்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை விசாரணை செய்தனர். அதற்கு அவர், என்னிடம் வரி செலுத்தும் அளவுக்கு எந்த பொருளும் கிடையாது. நான் வைத்திருக்கும் மொத்த பொருட்களின் மதிப்பு ரூ.5,000ஐ கூட தாண்டாது எனக் கூறியுள்ளார்.
இருப்பினும் அவரது 2 பெட்டிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் ஸ்கேன் செய்து பார்த்ததில் எதுவுமில்லை என்று தெரிய வந்தது. அப்போது நந்தகோபால், உடனே சோதனையை முடிக்குமாறு அவசரப்படுத்தியுள்ளார்.
இதனால் அதிகாரிகளுக்கு அவர் மீது மீண்டும் சந்தேகம் வந்தது. அவருடைய 2 சூட்கேஸ்களையும் திறந்து பார்த்தனர். அதில் இரண்டு நூடுல்ஸ் பாக்கெட்களும், உடைகளும் மட்டும் இருந்தன. அவர் வைத்திருந்த நூடுல்ஸ் பாக்கெட்டை உடைத்து பார்த்ததில் உள்ளே நூடுல்ஸ்களுக்கு பதிலாக கார்பன் பேப்பர்களில் வைரம், வைடூரியம், முத்து, பவளம் போன்ற விலையுயர்ந்த கற்கள் இருந்தன.
இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் நந்தகோபாலை கைது செய்து விசாரித்ததில், திருச்சியை சொந்த ஊராக கொண்ட அவர், கடந்த சில வருடங்களாக ஜெய்ப்பூரில் தங்கியிருப்பது தெரியவந்தது. இவர் நீண்ட நாட்களாக இதே போன்று வைரங்களை கடத்தி வருவதாகவும், கடத்தி வந்த இந்த வைரங்களை சென்னையில் ஒரு நபரிடம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
கடத்தி வரப்பட்ட வைரங்களின் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும்.












Click it and Unblock the Notifications