கேஸ் விமானத்தை இயக்க கத்தார் ஏர்வேஸ் திட்டம்
துபாய்: உலகிலேயே முதல் முறையாக கேஸ் மூலம் இயங்கும் விமானத்தை இயக்க கத்தார் ஏர்வேஸ் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக கத்தார் கேஸ் மற்றும் ஷெல் ஆகிய இரு நிறுவனங்களுடனும் கத்தார் ஏர்வேஸ் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பான விரிவான விவரங்களை அடுத்த மாதம் துபாயில் நடைபெறும் விமானக் கண்காட்சியின்போது வெளியிடவுள்ளதாகவும் கத்தார் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
இந்தப் புதுமைத் திட்டம் குறித்து கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு பொது மேலாளர் அலி அல் ராய்ஸ் கூறுகையில், இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி விமானங்களை இயக்குவது குறித்து கத்தார் கேஸ், ஷெல் ஆகிய நிறுவனங்களுடன் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது.
இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தும் வகையிலான எந்திரங்களைத் தயாரிப்பது குறித்து கத்தார் கேஸ் மற்றும் ஷெல் நிறுவனங்கள், ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனங்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் உலகின் முதல் விமான நிறுவனமாக கத்தார் ஏர்வேஸ் விளங்கும். இதை நனவாக்குவதற்காக எங்களது பொறியாளர்களும், விஞ்ஞானிகளும் முழு வீச்சில், ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்துக் கொண்டுள்ளனர்.
கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் புதிதாக 150 விமானங்களை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளோம். இதில் 5 விமானங்கள், டபுள் டெக்கர் சூப்பர் ஜம்போ ஏ-380 விமானங்களும் அடக்கம் என்றார் அவர்.
கத்தார் நாட்டில் 910 டிரில்லியன் கன அடி கேஸ் இருப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.