அமைதி பேச்சுவார்த்தை பாதிக்கும் - தமிழ் எம்.பிக்கள்
கொழும்பு: தமிழ்ச்செல்வன் மரணத்தால், இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சாத்தியக்கூறுகள் சிதறிப் போய் விட்டன என்று தமிழ் தேசிய கூட்டணி தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன், இலங்கை விமானப்படைத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டது குறித்து தமிழ்த் தேசிய கூட்டணி அதிர்ச்சியும், கவலையும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சாத்தியக்கூறுகள் முற்றிலும் சிதறிப் போய் விட்டதாக அது கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ் தேசிய கூட்டணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இலங்கை இனப் பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதில் அதிபர் ராஜபக்சேவுக்கு சற்றும் அக்கறை இல்லை என்பதை இந்த செயல் நிரூபித்து விட்டது.
தமிழ் ஈழப் போராட்டத்திற்காக சுயநலமற்ற வகையில் தியாக மனப்பான்மையுடன் செயல்பட்டவர் தமிழ்ச்செல்வன். தமிழ் மக்களுக்காக அயராது பாடுபட்டவர் தமிழ்ச்செல்வன்.
இலங்கை அரசு தமிழ்ச்செல்வனைக் கொன்றதன் மூலம் அமைதித் தீர்வுக்கான சாத்தியக் கூறுகள், மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவற்கான சாத்தியக்கூறுகள் முற்றிலும் இல்லாமல் போய் விட்டது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டணியின் வெளியுறவுக் கமிட்டி உறுப்பினரான கஜேந்திர குமார் பொன்னம்பலம் கூறுகையில், தமிழ்ச்செல்வனை குறி வைத்துக் கொன்றிருப்பது இலங்கை அரசின் தவறான நடவடிக்கையாகும்.
அமைதித் தீர்வுக்கும், சமத்துவம் வாய்ந்த தீர்வுக்கும் இலங்கை அரசு தயாராக இல்லை என்பதை நாங்கள் பலமுறை கூறி வந்துள்ளோம். அது இப்போது நிரூபணமாகியுள்ளது.
அமைதித் தீர்வை நாங்கள் அனைவரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையிலும் அதை சற்றும் மதிக்காமல் இலங்கை அரசு இவ்வாறு கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.
விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தைக்கு வரவழைப்பதற்காக இலங்கை அரசு ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருப்பதாக சர்வதேச சமுதாயம் தொடர்ந்து கூறி வந்தது. ஆனால் அதை நாங்கள் மறுத்து, அமைதித் தீர்வுக்கான எண்ணம் இலங்கையிடம் இல்லை, இனப் படுகொலையை அது நடத்தி வருகிறது என்று கூறி வந்தோம். இப்போது நாங்கள் சொன்னதுதான் நடந்துள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கம் சார்பில் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தலைமைப் பொறுப்பேற்று செயல்பட்டவரை இலங்கைப் படைகள் கொன்றிருப்பதன் மூலம் பேச்சுவார்த்தை மீது இலங்கை அரசுக்கு நம்பிக்கை இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
தற்போது சர்வதேச சமுதாயம் என்ன செய்யப் போகிறது என்பதை உலகெங்கும் உள்ள தமிழர்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications