தமிழன் என்பதால் தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல்: கருணாநிதி
சென்னை: ஒரு தமிழன் என்பதால், எனது உடலில் ஓடுவது தமிழ் ரத்தம் என்பதால், தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவித்தேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு முதல்வர் கருணாநிதி அளித்துள்ள பதிலும் வருமாறு:
கேள்வி: தமிழ்ச்செல்வன் மறைவுக்கு நீங்கள் மனிதாபிமானத்துடன் இரங்கல் தெரிவித்ததையொட்டி, ஜெயலலிதா அதற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்து உடனே ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்று கூறியிருக்கிறாரே
பதில்: ஆட்சியில் இல்லாத காரணத்தால், ஆத்திரத்தில் அல்லல்படுகிறார். எதிர்க்கட்சிக்காரர் ஒருவர் மறைந்தாலே இரங்கல் தெரிவிப்பது மனித நேயப் பண்பாடு என்பது மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் தெரியும்.
அந்த அடிப்படையில் தான் அதிமுகவிலே இருந்த நாவலர் நெடுஞ்செழியன் மறைந்த போது கூட நான் தேடிச் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு வந்தேன்.
இலங்கையிலே கொல்லப்பட்டது ஒரு தமிழன். என் உடலில் ஓடுவது தமிழ் ரத்தம். எனவே தான் என்னுடைய இரங்கலை நான் தெரிவித்தேன்.
ஜெயலலிதாவுடன் இன்றளவும் தோழமை கொண்டு, இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, ஜெயலலிதா இல்லத்திற்கு சென்று வந்த மதிமுக தலைவர் வைகோ, தமிழ்ச்செல்வன் மறைவுக்காக உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து கண்டிக்க வேண்டுமென்று அறிக்கை விடுத்தால் அதற்கு ஜெயலலிதா ஒப்புதல்.
அதே தமிழ்ச்செல்வன் மறைவுக்காக நான் அறிக்கை விடுத்தால் என்னுடைய ஆட்சியைக் கலைக்க வேண்டுமா. எப்படியாவது ஆட்சி கவிழ்க்கப்படாதா. தான் மீண்டும் ஆட்சிக்கு வந்து சுரண்ட முடியாதா என்று ஜெயலலிதா தவியாய் தவிக்கிறார். என்ன செய்வது. ஆட்சிக்கு வரவேண்டுமென்றால் மக்கள் ஆதரவு வேண்டுமே என்று கூறியுள்ளார் கருணாநிதி.
இதேபோல, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும், ஜெயலலிதாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications