புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் தொடரும்: இலங்கை பிரதமர்
கொழும்பு: விடுதலைப் புலிகளின் நிலைகள், பதுங்குமிடங்கள் மீது தொடர்ந்து விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தப்படும் என்று இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே கூறியுள்ளார்.
இதுகுறித்து இங்கிரியா என்ற இடத்தில் ரத்னஸ்ரீ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களின் பதுங்குமிடங்கள், நிலைகளை தொடர்ந்து குறி வைத்து பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த முயற்சியில் அவர்கள் சற்றும் தொய்வடைய மாட்டார்கள். தொடர்ந்து விமானப்படை தாக்குதலும் நடைபெறும்.
புலிகளுடன் புதிய போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வதை அரசு விரும்பவில்லை. அதேசமயம், எந்தவித நிபந்தனையும் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராகவே உள்ளது.
அரசு பேச்சுவார்த்தையைப் புறக்கணிக்கவில்லை. விடுதலைப் புலிகள்தான் அமைதித் தீர்வுக்கான முயற்சியிலிருந்து பின் வாங்கிச் சென்றனர். அவர்கள் மீண்டும் பேச்சு நடத்த வந்தால் அதை அரசு வரவேற்கும். அதேசமயம் எங்களது தாக்குதலும் தொடரும் என்றார் அவர்.
இதற்கிடையே, தமிழ்ச்செல்வன் படுகொலைக்குப் பழிவாங்கும் விதமாக பெரும் தாக்குதலைத் தொடுப்போம் என விடுதலைப் புலிகளின் கடற் படைப் பிரிவு தலைவர் சூசை மற்றும் அமைதி செயலக தலைவர் புலித்தேவன் ஆகியோர் உறுதி பூண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.