பட்டாசு வெடிக்க கட்டுப்பாடா?-பாஜக எதிர்ப்பு
சென்னை: தீபாவளி திருநாளின் போது பட்டாசு வெடிக்க காவல் துறையினர் கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது என்று தமிழக பாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்துக்கள் பண்டிகையின்போது மட்டும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. போலீசும் அரசும் கெடுபிடி செய்கின்றன.
இந்துக்களின் முக்கியமான பண்டிகையான தீபாவளியின்போது பட்டாசு வெடிப்பதற்கு போலீசார் கடும் நிபந்தனைகள் விதித்துள்ளனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்துக்கள் பண்டிகைக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்க கூடாது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு முதலமைச்சர் கருணாநிதி இரங்கல் தெரிவித்திருப்பது தவறான செயல். இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பரிந்து பேசுவது மாபெரும் குற்றமாகும்.
இலங்கை தமிழர்களுக்காக பாஜக சார்பில் திரட்டப்பட்ட நிவாரண பொருட்களை செஞ்சிலுவை சங்கம் மூலம் அனுப்புவதற்கு முயற்சி செய்தோம். ஆனால் மத்திய அரசு அனுமதி தரவில்லை.
இலங்கை பிரச்சினையில் நீரந்தர தீர்வு காண விடுதலைப் புலிகளை ஒதுக்கி வைத்து விட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்.