கோபத்தில் கிருஷ்ணர் - சுடிதாருக்குத் தடை!!
குருவாயூர்: புகழ் பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவில் ஜோதிடர்கள் தேவ பிரஸ்னம் பார்த்தபோது கிருஷ்ணர் கோபத்துடன் இருப்பதாக தெரிய வந்ததால், பெண்கள் சுடிதார் அணிந்து வரத் தடை விதிக்கப்படவுள்ளது.
கேரளாவில் உள்ள அனைத்து இந்துக் கோவில்களுக்கும் வரும் ஆண்கள் மேல் துண்டு மற்றும் வேட்டியுடனும், பெண்கள் பாரம்பரிய கேரள உடை, பட்டுச் சேலை போன்றவற்றுடன்தான் வர வேண்டும் என விதி உள்ளது. இந்த விதியை கேரள கோவில் நிர்வாகங்கள் கடுமையாக கடைப்பிடித்து வருகின்றன.
ஆனால் கால மாற்றத்திற்கேற்ப இந்த விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என பல்வேறு பெண்கள் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த குருவாயூர் கிருஷ்ணர் கோவில் நிர்வாகம், கடந்த ஜூலை மாதம் பெண்கள் சுடிதார் அணிந்தும் கோவிலுக்கு வரலாம் என முடிவெடுத்தது.
இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களாக கோவிலில் கடைப்பிடிக்கும் விதிமுறைகள் ஆகமப்படி இருக்கிறதா, வழிபாட்டு முறைகள் முறையாக நடக்கின்றனவா என்பதை அறிய தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டு வந்தது.
பத்நாப சர்மா என்ற தலைமை ஜோதிடர் தலைமையில் 9 ஜோதிடர்கள் இதில் கலந்து கொண்டு பிரசன்னம் பார்த்தனர். இதில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஐந்தாவது நாள் பிரசன்னத்தின்போது கிருஷ்ணர் கோபமாக இருப்பதாக தெரிய வந்ததாம்.
இதையடுத்து பாரம்பரிய உடைகளை மட்டுமே இனிமேல் பெண்கள் அணிந்து வர வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதாம். வழிபாட்டு முறைகள், சடங்குகள், பாரம்பரியங்களை மாற்றக் கூடாது என்று ஜோதிடர்கள் குழு கோவில் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியது.
மேலும் சுடிதாருடன் பெண்கள் வரலாம் என்ற உத்தரவை கோவில் நிர்வாகம் எப்படி அனுமதித்தது என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து கோவில் நிர்வாகக் குழு கூடி சுடிதாருக்குத் தடை விதிக்கத் தீர்மானித்தது. இதுதொடர்பாக கோவில் தந்திரி சென்னாஸ் ராமன் நம்பூதிரிபாட் உள்ளிட்டோர் கூடி விவாதித்து முடிவெடுத்தனர்.
இதுகுறித்து குருவாயூர் தேவஸ்தான தலைவர் தோட்டத்தில் ரவீந்திரன் கூறுகையில், இந்த விவகாரம் குறித்து கோவில் தந்திரியுடன் விவாதிக்கப்பட்டது. சுடிதார் விவகாரத்தில் எந்த அரசியல் தலையீடும் இல்லை, நெருக்கடியோ அல்லது நிர்ப்பந்தமோ இல்லை.
காலத்திற்கேற்ற வகையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என பல்வேறு இந்து அமைப்புகள், பெண்கள் அமைப்புகளிடமிருந்து கோரிக்கை வந்தது. இதன்படியே சுடிதார் அணிந்து பெண்கள் வரலாம் என்ற முடிவை எடுக்க நேரிட்டது.
தற்போது தேவ பிரசன்னத்தின் முடிவு அதற்கு மாறாக இருப்பதால் அதை நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. தேவ பிரசன்னம் தொடர்பாக இறுதி அறிக்கையை ஜோதிடர் குழு கொடுத்தவுடன் இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும். அனேகமாக முன்பிருந்ததைப் போலவே பாரம்பரிய உடைகளில் மட்டுமே பெண் பக்தர்கள் வரலாம் என தீர்மானிக்கப்படலாம் என்றார்.