காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது: மழை நீடிக்கும்
சென்னை:
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து விட்டது. ஆனாலும் தமிழகம் முழுவதும் பரவலாக மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நேற்று முன் தினம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம்
அறிவித்திருந்தது.
இந் நிலையில் சென்னையில் நேற்று முழுவதும் நல்ல மழை பெய்தது. இதனால் நகரின் பல முக்கிய சாலைகளில் ஆறு போல மழை நீர் ஓடியது. வாகனங்களில் சென்றோர் குறிப்பாக, இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
சனிக்கிழமை இரவிலும் நகரின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை கொட்டியது. புறநகர்ப் பகுதிகளில் லேசான மழை காணப்பட்டது.
நீலகிரி மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அங்கு பெய்த கன மழை காரணமாக சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர் மழை காரணமாக ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.
ஈரோடு, வேலூர் உள்ளிட்ட மேலும் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மதுரையில் பெய்த கன மழை காரணமாக மீனாட்சி அம்மன் கோவிலில், ஆடி வீதியில் மழை நீர் குளம் போல தேங்கி நின்றது.
நெல்லை மாவட்டத்தில் கன மழை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடனாநதி, அடவிநயினார், குண்டாறு, ஆகிய அணைகள் நிரம்பி விட்டன. இன்னும் பல அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது.
அந்த மாவட்ட அணைகளில் நீர் மட்ட விவரம்:
பாபநாசம் - 120.70 அடி
சேர்வலாறு - 133.10 அடி
மணிமுத்தாறு - 68.90 அடி
கடனாநதி - 83 அடி
ராமநதி - 79.50அடி
அடவி நயினார் - 132.22 அடி
கருப்பாநதி - 54.14 அடி
குண்டாறு - 36.10 அடி
நம்பியாறு - 17.14 அடி
கொடுமுடியாறு - 48












Click it and Unblock the Notifications