மாஜிஸ்திரேட் மீது தாக்குதல் - நீதிபதிகள் நூதனப் போராட்டம்
சென்னை: சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட்டை வக்கீல்கள் தாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழகம் முழுவதும் உள்ள மாஜிஸ்திரேட்டுகள், ஓய்வின்றி பணியாற்றும் நூதனப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
சென்னை எழும்பூர் 5வது குற்றவியல் நீதிபதி முருகானந்தத்தை சமீபத்தில் இரண்டு வக்கீல்கள் தாக்கி, அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தினர். இது நீதித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக தங்கத்துரை என்ற வக்கீலை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்ட வக்கீல்கள் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இளங்கோவன் என்ற வக்கீலை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தமிழக நீதிபதிகள் சங்கம் கண்டித்திருந்தது. இந்த நிலையில் சங்கத்தின் அவசர பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. திண்டுக்கல் மாவட்ட மாஜிஸ்திரேட்டும், சங்கத்தின் தலைவருமான நீதிபதி ராமலிங்கம் தலைமை தாங்கினார்.
நூற்றுக்கும் மேற்பட்ட மாஜிஸ்திரேட்டுகள் இதில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
பின்னர் நீதிபதி ராமலிங்கம் கூறுகையில், எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் ஒரு சில வக்கீல்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகச் செயலை சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
இந்த சம்பவத்தை தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காகப் பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவைப் பாராட்டுகிறோம், நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
மாஜிஸ்திரேட் முருகானந்தம் மீது தாக்குதல் நடத்திய வக்கீல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியக் குற்றவாளியான வக்கீல் இளங்கோ மற்றும் அவருடைய கூட்டாளிகளைக் கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் நீதிபதிகளின் ஒற்றுமையைக் காட்டும் வகையில், முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 750 முன்சீப், மாஜிஸ்திரேட், துணை நீதிபதி, மாவட்ட நீதிபதிகள் 6ம் தேதியன்று மதிய உணவு இடைவேளையின்றி, அதாவது காலை முதல் மாலை வரை, தொடர் பணியாற்றும் போராட்டத்தை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார் ராமலிங்கம்.












Click it and Unblock the Notifications