மாணவரை 'மென்டல்' என திட்டியதாக ஆசிரியை மீது புகார்!
சென்னை: மனநலமற்ற பள்ளி மாணவனை, அதிகாரிகள் குழு முன்பு மென்டல் என கூறியதாக ஆசிரியை மீது புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரித்துள்ளார்.
தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி கவுன்சில் சார்பில் சென்னையில் 3 நாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் செயல் வழிக் கற்றல் முறை குறித்து கவுன்சில் நடத்திய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.
கருத்தரங்கத்தின் நிறைவு நாளின்போது இந்த ஆய்வறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் நாங்கள் ஆய்வுக்கு சென்றிருந்தோம். அப்போது, ஒரு முதல் மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு மாணவன் பார்க்க வித்தியாசமாக இருந்ததால், ஏன் இந்த பையன் இப்படி இருக்கிறான் என்று கேட்டோம். அதற்கு அந்த ஆசிரியை, அவனைப் பார்த்து, அவன் ஒரு மென்டல் என்று அலட்சியமாக கூறினார்.
அந்த ஆசிரியை கூறிய விதமும், அவரது வார்த்தையும் எங்களை வேதனைப் படுத்தி விட்டது. அந்த சிறுவன் மன நலமற்றவனாகவே இருந்தாலும் கூட அப்படிக் கூறியது மிகவும் தவறு. அத்தனை மாணவர்கள் முன்னிலையில் அந்த ஆசிரியை அப்படிக் கூறியது மிகவும் தவறு என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், இந்த சம்பவம் வருத்தத்திற்குரியது. இதுகுறித்து கல்வித்துறை சார்பில் நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியை தவறு செய்திருப்பது தெரிய வந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோல கடும் வார்த்தைகளைக் கூறி மாணவ, மாணவியர்களை ஆசிரிய, ஆசிரியைகள் கூறக் கூடாது. இப்படிப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.