புலிகளை மன்னிக்க மாட்டோம்-வாசன் ஆவேசம்
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த விடுதலைப் புலிகளை எக்காலத்திலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மீது முதுகுளத்தூர் அருகே நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரணை நடத்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பரூக்கி தலைமையில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.
இந்தக்குழு, உண்மை நிலையை ஆராய்ந்து முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று நம்புகிறோம். தாக்குதலில் ஈடுபட்டவர்களை சரியான முறையில் அடையாளம் கண்டறிந்து, அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் இலங்கை ராணுத்தினரால் குண்டு வீசிக் கொல்லப்பட்டது குறித்து அனைவரும் காங்கிரசின் நிலையை கேட்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மரணம் கொடூரமானது. அந்த கொலை சம்பவத்தை நாங்கள் மறக்கவில்லை. அதனால் விடுதலைப் புலிகளை எக்காலத்திலும் மன்னிக்க மாட்டோம்.
பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளை மதுரை ரயில்வே கோட்டத்திலிருந்து பிரித்து பாலக்காடு ரயில்வே கோட்டத்துடன் இணைத்ததற்கு ஒரு தரப்பினர் எதிப்பு தெரிவித்து வருகிறார்கள்.
அதுகுறித்து முறையாக கோரிக்கை வைத்தால், மத்திய அரசு கண்டிப்பாக பரிசீலனை செய்யும். சேலம் ரயில்வே கோட்டம் உருவானதன் மூலமாக தமிழக மக்களின் எண்ணத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றியுள்ளன என்றார்.