அதிமுக கூட்டணியை விட்டு விலக சொலவதா?: வீரமணிக்கு வைகோ கண்டனம்
சென்னை: புலிகளுக்கு எதிரான நிலையைக் கொண்ட ஜெயலலிதாவின் அதிமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக வேண்டும் என்று கூறியுள்ள தி.க. தலைவர் கி.வீரமணிக்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விடுதலைப் புலிகளுக்கு எதிர்ப்பு நிலை மேற்கொண்டு உள்ள அதிமுகவோடு மதிமுக கூட்டணி தொடர்வது சரியல்ல என்றும், விலக வேண்டும் என்றும் திராவிடர் கழக தலைவர் வீரமணி கருத்து தெரிவித்து உள்ளார்.
தமிழ் ஈழப் பிரச்சினையில் புலிகள் குறித்த அதிமுகவின் அணுகுமுறையை அறிந்திருந்த நிலையில்தான் கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில்தான் சேர வேண்டும் என்று மதிமுகவை வீரமணி வற்புறுத்தினார். தானே தூது செல்வதாகவும் கூறினார். பின்னர் திடீரென்று அவரே திமுகவை ஆதரித்தார். தற்போது அதிமுகவை வைகோ எதிர்க்க வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார்.
மதிமுகவை அழிக்க நினைக்கின்ற சக்திகள், அதிமுக கூட்டணியில் இருந்து மதிமுகவை வேறுபடுத்த திட்டமிட்டு விமர்சனங்களை செய்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் பதில் சொல்லும் முகத்தான் சில கேள்விகளை எழுப்புகிறேன்.
தமிழ் ஈழத்தையும், விடுதலைப் புலிகளையும் கடந்த ஆண்டு நான் ஆதரித்துப் பேசியதற்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்ததோடு, என்னைக் கைது செய்ய வேண்டும் என்றும் மதிமுகவை தடை செய்ய வேண்டும் என்றும் கூக்குரல் எழுப்பினார்களே அப்போதெல்லாம் இந்த ஆலோசனையாளர்கள் வாய் மூடிக் கிடந்தது ஏன்?
மதிமுக அமைப்புச் செயலாளர் சீமா பசீரும், தென் சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறனும் திமுக ஆட்சியில் காவல் துறையால் கைது செய்யப்பட்டபோது அதை கண்டிக்காதது ஏன்?
புலிகளை மன்னிக்க மாட்டோம்' என்று இன்றும் சொல்லுகிற காங்கிரசுடனான உறவை திமுகவும் மற்ற கட்சிகளும் முறித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை சொல்லத் தயாரா?
1998ம் ஆண்டு திமுகவை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றாததால் ஐக்கிய முன்னணி அரசைக் கவிழ்த்த அதே காங்கிரஸ் கட்சியோடு 2004ம் ஆண்டில் திமுக எந்த அடிப்படையில் கூட்டணி அமைத்தது?
மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே கொள்கை கொண்டவர்களா? எத்தனையோ பிரச்சினைகளில் எதிரும் புதிருமான நிலையைத்தானே மேற்கொள்கின்றனர்
மதிமுக தனது அடிப்படைக் கொள்கைகளில், லட்சியங்களில் எத்தகைய சமரசமும் செய்து கொள்ளாமல், அதே நேரத்தில் அதிமுகவுடன் தோழமையோடு மதிப்பும், அன்பும், நம்பிக்கையும் கொண்டு, தமிழ்நாட்டில் இன்று நடைபெறுகிற திமுக அரசை எதிர்த்து மக்கள் சக்தியை திரட்டும் ஜனநாயகக் கடமையைத் தொடர்ந்து செய்யும் என்று கூறியுள்ளார் வைகோ.