சென்னைக்கு திருப்பிவிடப்பட்ட லண்டன்-பெங்களூர் விமானம்
பெங்களூர்: பெங்களூரில் மோசமான வானிலை நிலவியதையடுத்து லண்டனில் இருந்து பெங்களூர் வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.
லண்டனில் இருந்து நேற்றிரவு கிளம்பிய அந்த விமானம் இன்று காலை 8.30 மணிக்கு பெங்களூரில் தரையிறங்க இருந்தது. ஆனால், பெங்களூரை அடைந்த பின் அந்த விமானத்தால் அங்கு தரையிறங்க முடியவில்லை.
வானிலை மிக மோசமாக இருந்ததால் அந்த விமானம் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டது. இதையடுத்து 9 மணிக்கு அந்த விமானம் சென்னையில் தரையிறங்கியது. பயணிகளும் விமானிகளும் இறங்கிவிட்டனர்.
10 மணிக்கு மேல் பெங்களூரில் வானிலை சரியாகிவிட்டது. ஆனாலும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் விதிமுறையால் அந்த விமானம் மீண்டும் உடனடியாக பெங்களூக்குக் கிளம்பவில்லை.
'விதியால் நொந்த பயணிகள்':
நீண்டதூரம் பயணிக்கும் விமானங்களை இயக்கும் விமானிகள் விமானத்தை விட்டு இறங்கிவிட்டால் அடுத்து 7 மணி நேர ஓய்வுக்குப் பின்னரே விமானத்தை இயக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் ஏர்வேஸில் விதி உள்ளது. அதுவரை விமானி மீண்டும் விமானத்தில் கூட ஏறக் கூடாது என்கிறது அந்த விதி.
இதனால் அந்த விமானத்தை மாலை 5 மணிக்கு மேல் தான் பிரிட்டிஷ் ஏர்வேஸ் இயக்கும். அதற்குள் சென்னையில் இருந்து 5 முறை பெங்களூருக்கு விமானத்தில் போய் வந்துவிடலாம் என்பதால் நொந்து போன பயணிகள், அந்த விமானத்தில் இருந்து இறங்கி பிற விமானங்கள் மூலம் பெங்களூருக்கு கிளம்பிச் சென்றனர்.