மலேசியாவில் கோவில்கள் இடிப்பு-சென்னையில் இந்து முன்னணி, பாஜக ஆர்ப்பாட்டம்
சென்னை: மலேசியாவில் இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன், பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள மலேசிய தூதரகத்தின் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இவர்கள் மலேசிய அரசை கண்டித்து கோஷமிட்டனர். ஆனால், போலீஸ் அனுமதியின்றி இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் இல.கணேசன்,
அன்னிய நாடுகள் விஷயத்தில் மத்திய அரசின் அணுகுமுறை சரியில்லை. நேபாளம், இலங்கை பாகிஸ்தான், மலேசியா நாடுகளில் இந்துக்கள் தாக்கப்படுவது தொடர்பாக மத்திய அரசு மெளனமாக இருந்து வருகிறது.
ஆனால் பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் ஹனீப் விவகாரத்தில் எடுத்துக்கொண்ட அக்கறையில் ஒரு சிறிய அளவு கூட இந்துக்கள் விஷயத்தில் எடுக்கவில்லை. இதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது என்றார்.