கோவைக்கு புது எப்.எம். ரேடியோ
சென்னை: கோவையில் ஹலோ எப்.எம். ரேடியோ கால் பதித்துள்ளது. இதேபோல மைசூரில் பிக் எப்.எம். ரேடியோவும், ராஞ்சியில் ரேடியோ மந்த்ராவும் கிளை பரப்பியுள்ளன.
தினத்தந்தி குழுமத்திலிருந்து நடத்தப்படுவது ஹலோ எப்.எம். இதற்கு, சென்னை, மதுரை, நெல்லை, தூத்துக்குடியில் ஏற்கனவே கிளைகள் உள்ளன. இந்த நிலையில் 5வதாக கோவையிலும் தனது ஒலிபரப்பை ஹலோ எப்.எம். தொடங்கியுள்ளது.
ஹலோ எப்.எம். தலைமை செயல் அதிகாரி ராஜீவ் நம்பியார் கூறுகையில், தென்னிந்தியாவில் தங்களது விளம்பரங்களை பிரபலப்படுத்த எங்களது எப்.எம். நிலையங்கள் உதவும். சிறு மற்றும் பெரும் நிறுவனங்களுக்கு எப்.எம். நிலையங்கள் மூலம் பிசினஸை மேம்படுத்த பெரும் உதவியாக இருக்கும்.
ரேடியோவின் பிரபலம் இன்றளவும் குறையாமல் இருப்பதே தொடர்ந்து அவை வெற்றி பெற முக்கியக் காரணம். மேலும் முன்பை விட அதி நவீன வசதிகள் வந்து விட்டதால் ஒலிபரப்பிலும் துல்லியம் கூடியுள்ளது. விளம்பரங்களும் வெகு எளிதில் மக்களை அடைகிறது.
அடுத்ததாக திருச்சி மற்றும் புதுச்சேரியில் எங்களது ஒலிபரப்பை தொடங்கவுள்ளோம் என்றார்.
கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஹலோ எப்.எம்.ஒலிபரப்பை தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் தொடங்கி வைத்தார்.
இதேபோல, ரிலையன்ஸ் நிறுவன குழுமத்திலிருந்து வெளியாகும் பிக் எப்.எம். தனது 37வது நிலையத்தை மைசூரில் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 45 நிலையங்களைத் தொடங்கி விட அது திட்டமிட்டுள்ளது.
இதேபோல ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் தனது 8வது ஒலிபரப்பு நிலையத்தை ரேடியோ மந்த்ரா தொடங்கியுள்ளது.