8 கை, கால்களுடன் பிறந்த குழந்தைக்கு வாழ்வு தந்த டாக்டர்கள்
பெங்களூர்: 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த 2 வயது பெண் குழந்தைக்கு பெங்களூர் மருத்துவமனையில் கிட்டத்தட்ட 40 மணி நேரம் நடந்த அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அந்தக் குழந்தை 2 கை, கால்களுடையதாக மாற்றப்பட்டு தற்போது நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பீகார் - நேபாள நாட்டு எல்லைப் புறத்தில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்குப் பிறந்த குழந்தைதான் லட்சுமி. 2 வயதாகும் லட்சுமி பிறந்தபோதே நான்கு கைகள், நான்கு கால்களுடன் பிறந்தது. ஆனால் தலை மட்டும் ஒன்றுதான் இருந்தது.
இதற்கு என்ன காரணம் என்றால், லட்சுமியின் தாயார் கர்ப்பமானபோது அவரது கருப்பையில் இரட்டைக் குழந்தைகளுக்கான கரு உருவானது. ஆனால் அது குறிப்பிட்ட காலத்திற்கு மேல் ஒரு கரு வளராமல் அப்படியே நின்று விட்டது. இதனால் லட்சுமியுடன் ஒட்டியபடி இன்னொரு சிசுவின் கைகளும், கால்களும் வளர்ந்தன. இதனால்தான் லட்சுமி நான்கு கைகள், கால்களுடன் பிறக்க நேரிட்டது.
இப்படி குழந்தை பிறந்ததால் லட்சுமியின் பெற்றோர் பெரும் வேதனை அடைந்தனர். பல டாக்டர்களையும் அணுகி வழக்கமான குழந்தையாக லட்சுமிய மாற்ற முடியாதா என்று ஆலோசனை கேட்டனர். ஆனால் போன இடமெல்லாம் அவர்களுக்கு பாதகமான பதிலே கிடைத்தது.
50 ஆயிரம் பேரில் ஒரு குழந்தைக்குத்தான் இதுபோல பாராசைட் பிரச்சினை வருமாம். ஆனால் இதுவரை இப்படிப்பட்ட குழந்தைகளிடம் நடத்தப்பட்ட அறுவைச் சிகிச்சை வெற்றி பெற்றதில்லை.
இந்த நிலையில்தான் பெங்களூரைச் சேர்ந்த ஸ்பர்ஷ் மருத்துவமனை, லட்சுமிக்கு புது உயிர் அளிக்க முன்வந்தது. அறுவைச் சிகிச்சை மூலம் 2 கைகளையும், கால்களையும் அகற்ற முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து லட்சுமியை எடுத்துக் கொண்டு அவளது பெற்றோர் பெங்களூர் விரைந்து வந்தனர். ஸ்பர்ஷ் மருத்துவமனையில் லட்சுமியை அனுமதித்தனர்.
குழந்தைகள் நல அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் சரண் பாட்டீல் தலைமையில் 30 பேர் கொண்ட டாக்டர்கள் குழு லட்சுமிக்கு அறுவைச் சிகிச்சை செய்வது தொடர்பாக கடந்த ஒரு மாதமாக பல்வேறு சோதனைகள், ஆய்வுகளை மேற்கொண்டது.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை ஆபரேஷன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலை தொடங்கிய இந்த ஆபரேஷன் இன்று காலை வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. கிட்டத்தட்ட 40 மணி நேரம் நடந்த இந்த ஆபேரஷன் இந்தியாவிலேயே முதல் முறையாக நடந்துள்ள அரிய வகை ஆபரேஷன் ஆகும். உலக மருத்துவ வரலாற்றிலும் இந்த ஆபரேஷன் முக்கிய இடத்ைதப் பிடித்து விட்டது.
லட்சுமியின் உடலில் எக்ஸ்ட்ராவாக வளர்ந்திருந்த கைகளையும், கால்களையும் முதலில் டாக்டர்கள் துண்டித்து அப்புறப்படுத்தினர். அதன்பின்னர் குழந்தையின் முதுகு தண்டுவடத்தை நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் சரி செய்தனர். இது மிகவும் சிக்கலான ஆபரேஷன் என்பதால் டாக்டர்கள் குழு மிகுந்த சிரமத்திற்கிடையே இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டது.
லட்சுமியின் உடலில் செயல்படும் தன்மையில் இருந்த ஒரு சிறுநீரகம், பாலியல் உறுப்புகள், சிறுநீரக பைகள் உள்ளிட்டவை சரி செய்யப்பட்டுள்ளன.
இடுப்பு எலும்பும் சீரமைக்கப்பட்டுள்ளது. கால்களும் சீர் செய்யப்பட்டுள்ளன. இதற்கு பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
வெற்றிகரமாக நடந்த இந்த அறுவைச் சிகிச்சை குறித்து டாக்டர் சரண் பாட்டீல் கூறுகையில், எங்களது எதிர்பார்ப்புகளையும் தாண்டி குழந்தையிந் உடல் உறுப்புகள் மிகவும் சீராக இயங்குகின்றன. லட்சுமி நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார்.
இனி லட்சுமி வழக்கமான பெண் குழந்தையைப் போல அனைத்து நலமுடனும் வாழ வழி பிறந்துள்ளது என்றார்.
தற்போது லட்சுமி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். அங்கு சில நாட்கள் டாக்டர்கள் அவரது உடல் நிலையைக் கண்காணிப்பார்கள்.
தங்களது மகளுக்குப் புது வாழ்வு கொடுத்துள்ள டாக்டர்களுக்கு லட்சுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி கூறினர். தங்களது மகளுக்குப் புது வாழ்க்கை கொடுத்த டாக்டர்களுக்கும், கடவுளுக்கும் நன்றி சொல்வதாக லட்சுமியின் தந்தை சாம்பு கூறினார்.
லட்சுமி விரைவில் முழு குணமடைய நாமும் பிரார்த்திப்போம்.












Click it and Unblock the Notifications