ரூ. 6,000 கோடியில் காவிரி-வைகை ஆறுகளை இணைக்க திட்டம்
சென்னை: காவிரியையும் வைகை நதியையும் இணைப்பது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளுக்கு மட்டும் ரூ. 6,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய நதிகளை இணைப்பதற்கு முன் தென்னகத்தின் முக்கிய நதிகளை இணைக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதன்மூலம் வற்றாத ஜீவ நதிகளின் நீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்த்து, அதை வறண்ட நதிகளுக்கு திருப்பிவிட்டால் அதையொட்டிய பகுதிகள் வளம் பெரும்.
அந்த வகையில் முதல்கட்டமாக காவிரியையும் வைகையையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. இது குறித்து தமிழக பொதுப்பணித் துறை ஆய்வுப் பணியில் இறங்கியது.
காவிரி நதியில் கரூர் பகுதியில் இருந்து வைகை நதி வரை கால்வாய் வெட்டினால் இரு நதிகளையும் இணைப்பது எளிதாகும் எனத் தெரியவந்துள்ளது.
கரூர் அருகே ஓடும் காவிரியில் இருந்து குண்டாறு வரை கால்வாய் வெட்டலாம். பின்னர் இந்த குண்டாற்றை அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, பம்பாறு, கோட்ட கரையாறு போன்ற சிற்றாறுகளுடன் இணைக்கலாம்.
இறுதியில் அதை வைகை நதியுடன் இணைக்கலாம். இத் திட்டத்தின்படி மொத்தம் 225 கி.மீ தூரத்துக்கு கால்வாய் வெட்டப்பட வேண்டும்.
இத் திட்டத்தை இரண்டு கட்டங்களாக நிறைவேற்ற முடியும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
முதல் கட்ட பணிகளை நிறைவேற்ற ரூ. 6,000 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆறுகள் இணைக்கப்பட்டால் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்கள் பலன் பெறும்.
கால்வாய் வெட்ட 3,684 ஹெக்டேர் நிலம் தேவைப்படுமாம். இதர்காக 2,228 ஹெக்டேர் பட்டா நிலங்களை பொது மக்களிடம் இருந்து கையகப்படுத்த வேண்டியதிருக்கும். மீதமுள்ள் நிலம் அரசின் புறம்போக்கு நிலம் மற்றும் வனத்துறையின் நிலம் என்பதால் சிக்கல் இல்லை.
இத் திட்டம் குறித்து தொடர்ந்து ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.