'லட்சம் தமிழ்ச்செல்வன்கள் உருவெடுப்பார்கள்'-வைகோ
சென்னை: ஒரு தமிழ்ச்செல்வன் இறந்தால் என்ன, லட்சம் தமிழ்ச்செல்வன்கள் உருவெடுப்பார்கள் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் வைகோ பேசியதாவது,
தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பொதுக்கூட்டத்தில் பேசும்போது நாட்டு வெடிகுண்டுகள், கையெறி குண்டுகளை எறிந்துள்ளனர்.
ஆனால் நாஞ்சில் சம்பத் கலவரத்தை தூண்டினார் என்று கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். அதே இடத்தில் நான் பேசப் போகிறேன். என்னை என்ன செய்வார்கள் என்று பார்க்கிறேன். மின்சாரம், மைக் இல்லாவிட்டாலும் நான் கட்டாயம் பேசுவேன்.
இந்த அராஜகங்களை ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தவணை முறையில் மிரட்டும் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சிகள் ஏன் சுட்டிக் காட்டவில்லை. பக்கத்து வீடு தானே எரிகிறது என நினைக்காதீர்கள். உங்களுக்கும் இந்த நிலை ஏற்படும்.
அதிமுக கூட்டணியை விட்டு விடுதலை புலிகளுக்கு ஆதரவாகப் பேசும் மதிமுக விலகத் தயாரா என திமுகவினர் கேட்கின்றனர்.
அங்குள்ள தமிழர்களைக் கொல்ல மத்திய அரசு ரகசிய ஆயுத சப்ளை செய்கிறது. இவர்களுடன் கூட்டணி வைத்துள்ள திமுக அரசை விலகச் சொல்வார்களா. விடுதலைக்குப் போராடிய தமிழ்ச்செல்வனை பரிதாபமாக சுட்டுக் கொன்றுள்ளனர்.
ஒரு தமிழ்ச்செல்வன் இறந்தால் என்ன. லட்சம் தமிழ்ச்செல்வன்கள் உருவெடுப்பார்கள் என்றார் வைகோ.