சேலை திருடிய 3 வட மாநில பெண்கள் கைது
வள்ளியூர்: நெல்லை மாவட்டம் வள்ளியூர் கோ-ஆப்டெக்ஸ் ஜவுளிக் கடையில் பட்டுசேலை திருடிய 3 வடமாநில பெண்களை போலீசார் கைது செய்தனர்.
வள்ளியூர் புதிய பேருந்து நிலையம் எதிரே தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி கடை உள்ளது. இக்கடையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று மாலை கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதையடுத்து கடை ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு துணிமணிகளை எடுத்துக் காட்டுவதில் மும்முரமாக இருந்தனர்.
அப்போது வட மாநிலத்தை சேர்ந்த 3 பெண்கள் கடைக்குள் நுழைந்தனர். அவர்கள் பட்டு சேலை எடுக்க வேண்டும் என்று கூறி பட்டு பிரிவுக்கு சென்று சேலைகளை பார்வையிட்டனர்.
நீண்ட நேரமாக சேலைகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த அவர்கள் சேலைகள் எதுவும் எடுக்காததால் அவர்கள் மீது ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் திடீரென்று அந்த 3 பெண்களும் பட்டு சேலைகளை பதுக்கி வைத்தனர்.
இதைப் பார்த்த கடை ஊழியர்கள் அவர்களை கடையை விட்டு வெளியேற விடாமல் விசாரணை நடத்தினர். அப்போது 3 பட்டு சேலைகளை அப்பெண்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து கடை மேலாளர் வள்ளியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து அந்த 3 பெண்களையும் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரை சேர்ந்த மொராக் மனைவி ஜெயஸ்ரீ, குஜராத் கேக்டிலாயைச் சேர்ந்த கிரிப்பாய் மனைவி ஸ்ரீமோபேன், அகமதாபாத் சாபீர் மனைவி சாமா என்பது தெரிய வந்தது.
இதுபோன்று வேறு கடைகளில் அவர்கள் சேலை திருட்டில் ஈடுபட்டனரா என்பது குறித்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆசிரியையிடம் நகை பறிப்பு:
ஆசிரியையிடம் ரூ.50,000 மதிப்புள்ள நகைகளை பறித்து சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வள்ளியூர் அருகே உள்ள சாலைப்புதூரை சேர்ந்தவர் ராஜன். இவர் பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தகுமாரி. பணகுடியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
சாந்தகுமாரி உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை பார்க்க சென்றுவிட்டு இரவு 10 மணியளவில் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது இருளில் மறைந்திருந்த 3 மர்ம நபர்கள் சாந்தகுமாரி அணிந்திருந்த 12 பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.
இதன் மதிப்பு ரூ. 50,000 ஆகும். இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் நகை பறித்து சென்றவர்களை தேடி வருகிறார்கள்.
வள்ளியூர் பகுதியில் தொடர்ந்து நடந்து வரும் நகை பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.