For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்னிந்தியாவில் முதல் முறையாக ஆட்சி அமைக்கும் பாஜக

By Staff
Google Oneindia Tamil News

BJPபெங்களூர்: தென்னிந்தியாவில் முதல் முறையாக பாஜக ஆட்சி அமையும் மாநிலம் என்ற புதிய பெருமை கர்நாடகத்திற்குக் கிடைக்கவுள்ளது. அம்மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதால் மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கிறது பாஜக.

வட இந்தியாவில் செல்வாக்குடன் திகழும் பாஜகவால், தென்னிந்தியாவில் இதுவரை ஒருமுறை கூட ஆட்சி அமைக்க முடிந்ததில்லை. தென்னிந்தியாவில் பாஜகவுக்கு செல்வாக்கு ஓரளவுக்கு உள்ள மாநிலங்களில் கர்நாடகம் முக்கியமானது. பிற மாநிலங்களான தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இது எடுப்பார் கைப்பிள்ளை கட்சியாகவே இருந்து வருகிறது. ஆந்திராவிலும் இதே நிலைதான்.

இந்த நிலையில் தென்னிந்தியாவிலும் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு முதல் முறையாக கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக கர்நாடகத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொள்ள மத்திய அமைச்சரவை முடிவு செய்ததன் மூலம் இந்த வாய்ப்பு உருவாகியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் முதல் கர்நாடகத்தில் பெரும் அரசியல் குழப்ப சூழ்நிலை நிலவியது. மதச்சார்பற்ற ஜனதாதளம் செய்த பெரும் குழப்பத்தாலும், சொதப்பலாலும் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த குழப்பங்கள் அனைத்தும் தீர்ந்து தற்போது ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பாஜக கூட்டணிக்கு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் கடந்த 24 ஆண்டுளாகவே பெரும் அரசியல் சக்தியாக மாறவும், ஆட்சி அமைக்கவும் பாஜக முயற்சித்து வந்தது. ஆனால் இப்போதுதான் அதன் கனவு நனவாகிறது.

கடந்த 1983ம் ஆண்டு ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையிலான அரசுக்கு பாஜக ஆதரவு அளித்தது. அதுதான் முதல் முறையாக ஒரு காங்கிரஸ் அல்லாத அரசுக்கு பாஜக தந்த முதல் ஆதரவாகும்.

அந்த ஆண்டு ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையிலான ஜனதாக் கட்சி சிறுபான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க முயன்றது. கர்நாடகத்தில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி அமைந்தததும் அந்த ஆண்டில்தான்.

அந்த தேர்தலில் பாஜகவுக்கு 18 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். இதையடுத்து பாஜகவின் ஆதரவுடன் ஹெக்டே ஆட்சி அமைத்தார். இதன் மூலம் பாஜகவின் செல்வாக்கு கர்நாடகத்தில் உயரத் தொடங்கியது. அதன் பின்னர் பாஜக தொடர்ந்து தனது செல்வாக்கை பலப்படுத்தி வந்தது.

கடந்த 2004ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக (79 எம்.எல்.ஏக்கள்) உயர்ந்து சாதனை படைத்தது பாஜக. இருப்பினும் காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் கூட்டணி வைத்துக் கொண்டதால் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை.

ஆனால் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் கூட்டணி நீடிக்கவில்லை. தரம்சிங் அரசைக் கவிழ்த்து விட்டு மதச்சார்பற்ற ஜனதாதளம், பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்து புதிய தர்மத்தைப் படைத்தது.

அந்த சமயத்தில் இரு கட்சிகளும் ஆளுக்கு 20 மாதங்கள் ஆட்சி என்று ஒப்பந்தம் செய்து கொண்டன. ஆனால் ஒப்பந்தப்படி மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சியை ஒப்படைக்க முன்வராததால் பாஜக, குமாரசாமி அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது.

இதனால் ஏற்பட்ட குழப்பத்தால், கர்நாடக அரசியல் கடந்த சில மாதங்களாக பெரும் இடியாப்பச் சிக்கலில் சிக்கித் தவித்து வந்தது. குடியரசுத் தலைவர் ஆட்சியும் அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் பாஜக ஆட்சி அமைக்க திடீரென மதச்சார்பற்ற ஜனதாதளம் முடிவு செய்ததால், சிக்கல் நீங்கி பாஜக தலைமையிலான ஆட்சி அமையும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் ஆளுநர் செய்த தாமதத்தால் இந்த வாய்ப்பு இழுபறியாக இருந்தது.

பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்கள் டெல்லிக்குப் படையெடுத்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் முன்பு அணிவகுத்துத் தங்களது பலத்தைக் காட்டி ஆளுநரை, ஆட்சி அமைக்க அழைக்குமாறு அறிவுறுத்துமாறு கோரினர்.

இந்தச் சூழ்நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொள்ள மத்திய அமைச்சரவை நேற்று தீர்மானிக்கப்பட்டது. இதுதொடர்பாக குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அரசியல் விவகாரத்திற்கான மத்திய அமைச்சரவைக் குழு கூடி இந்த முடிவையும், பரிந்துரையையும் மேற்கொண்டது. இதன் மூலம் கர்நாடகத்தில் நிலவி வந்த அரசியல் குழப்பம் நீங்கியுள்ளது. பாஜகவும் முதல் முறையாக தென்னிந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் அமருகிறது.

முதல்வர் பதவியை ஏற்கவுள்ள முன்னாள் துணை முதல்வர் பி.எஸ்.எட்டியூரப்பா இன்று ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூரை சந்திக்கிறார். அனேகமாக திங்கள்கிழமை எட்டியூரப்பா தலைமையிலான அமைச்சரவை பதவியேற்கும் எனத் தெரிகிறது.

குமாரசாமி எச்சரிக்கை:

இதற்கிடையே, பாஜகவுக்கு குமாரசாமி ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தேவெ கெளடா விதித்துள்ள 12 நிபந்தனைகளையும் பாஜக மறக்கக் கூடாது. அதை முறையாக பின்பற்ற முயல வேண்டும்.

கெளடாவை குறைத்து மதிப்பிடவோ அல்லது அவரது செல்வாக்கைக் குறைக்கவோ பாஜக முயன்றால் கூட்டணி ஆட்சி நீடித்து நிலைக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X