திண்டுக்கல் அருகே ரயிலைக் கவிழ்க்க மீண்டும் சதி
மதுரை: திண்டுக்கல் அருகே ரயிலைக் கவிழ்க்க மீண்டும் சதி நடந்துள்ளது. தண்டவாளத்திற்கு இடையை இரும்புத் துண்டுகள் திணிக்கப்பட்டிருந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் அருகே கொடை ரோடு ரயில் நிலையப் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு தண்டவாளத்தில் இரும்புத் துண்டுகள் திணித்து வைக்கப்பட்டிருந்து. உரிய நேரத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந் நிலையில் இதே பகுதியில் மீண்டும் ரயிலைக் கவிழ்க்க சதி நடந்துள்ளது.
சென்னையில் இருந்து ராமேசுவரம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது. நேற்று அதிகாலை 1.30 மணிக்கு கொடைரோடு பகுதியை கடந்து சென்றது. அப்போது தண்டவாள பகுதியில் பயங்கர சத்தம் கேட்டது. இதனை கவனித்த ரெயில்வே ஊழியர் கொடை ரோடு ரயில் நிலைய ஸ்டேசன் மாஸ்டருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்ததும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது ரயில்களை பிரித்து அனுப்பும் பாயின்ட் பகுதியில் பெரிய இரும்பு துண்டு தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அவ்வழியே வந்த சென்னை- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் உடனே நிறுத்தப்பட்டு வேறு பாதை வழியாக மாற்றி விடப்பட்டது.
கடந்த வாரத்தில் தண்டவாளத்தின் மீது இரும்பு துண்டை வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி நடந்து உள்ளது. தற்போது 2-வது முறையாக நடந்த சதித் திட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.