சென்னை மெட்ரோ-'அண்டர்கிரவுண்டில்' அமையும் ரயில் நிலையங்கள்
சென்னை: சென்னையில் ரூ. 9,757 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 2008ம் ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் முதல் கட்டப் பணிகள் ரூ. 6,000 கோடியிலும், மீதமுள்ள பணிகள் ரூ. 3,745 கோடியிலும் அமலாக்கப்படவுள்ளன.
டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேசன் மேற்கொள்ள இருக்கும் இத் திட்டத்தின் கீழ் 2 வழித் தடங்களில் மொத்தம் 46.5 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும்.
வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை ஒரு வழித்தடமும், கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடமும் அமைக்கப்படவுள்ளது.
முதல் வழித்தடத்தின் மொத்த நீளம் 23.2 கி.மீ. இது வண்ணாரப்பேட்டை, எழும்பூர், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சைதாப் பேட்டை, கிண்டி வழியாக விமான நிலையம் வரை செல்லும்.
இதில் அண்ணா சாலையில் இருந்து சைதாப்பேட்டை வரை 11 கிமீ தூரத்துக்கு ரயில் சுரங்கப் பாதையில் இயக்கப்படவுள்ளது.
சுரங்கப் பாதை உள்ள இடங்களில் ரயில் நிலையங்களும் பூமிக்கு கீழே அமைந்திருக்கும். வண்ணாரப்பேட்டை-திரிசூலம் வழித் தடத்தில் அண்ணா சாலை, தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் பூமிக்கு கீழே ரெயில் நிலையங்கள் அமையும்.
இரண்டாவது வழித்தடம் 23.3 கிமீ தூரம் கொண்டதாக இருக்குமாம். இது கோட்டை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமைந்தகரை, அண்ணாநகர், திருமங்கலம், கோயம்பேடு, அசோக் நகர், ஆலத்தூர் வழியாக பரங்கிமலை வரை செல்லும்.
இந்த வழித் தடத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலை முதல் (சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் இருந்து) திருமங்கலம் வரை 9 கிமீ தூரத்துக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு அதில் ரயில் இயக்கப்படும். மொத்தம் நகருக்குள் 20 கி.மீ. தூரத்துக்கு சுரங்க ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது.
இந்சர் பாதையில் அமைந்தகரை, அண்ணாநகர் ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அண்டர்கிரவுண்டில் அமையவுள்ளன. சுரங்கப் பாதை அல்லாத இடங்களில் பாலம் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் இயக்கப்படும். இதனால் சாலைப் போக்குவரத்துக்கு எந்தவிதத்திலும் சிக்கல் ஏற்படாது.
2008ம் ஆண்டு தொடங்கி 2013ம் ஆண்டுக்குள் இத் திட்டத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications