சென்னையில் 5 ஸ்டார் தியேட்டர்
சென்னை: அபிராமி மெகா மால் வளாகத்தில் தமிழகத்தின் முதலாவது 5 ஸ்டார் அந்தஸ்து பெற்ற திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு படுத்துக் கொண்டே படம் பார்க்கும் வசதியுடன் 25 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை புரசைவாக்கத்தில், அபிராமி தியேட்டர் வளாகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு அதி நவீன அபிராமி மெகாமால் உருவாக்கப்பட்டது.
அபிராமி, பால அபிராமி, அன்னை அபிராமி, சக்தி அபிராமி என நான்கு தியேட்டர்கள் இந்த வளாகத்தில் உள்ளது.
இந்த நிலையில் புதிதாக ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற புதிய தியேட்டர் உருவாக்கப்பட்டுள்ளது. சுவர்ண சக்தி அபிராமி என இதற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த தியேட்டரை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
320 இருக்கைகளைக் கொண்ட இந்த தியேட்டர் முற்றிலும் குளிரூட்டப்பட்டது. அதி நவீன டிஜிட்டல் ஒலி, ஒளி அமைப்புகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.
கோல்டன் கிளாஸ் (டிக்கெட் தலைக்கு ரூ. 120), சில்வர் கிளாஸ் (டிக்கெட் தலைக்கு ரூ. 100), காப்பர் கிளாஸ் (டிக்கெட் தலைக்கு ரூ. 75), ஜனதா கிளாஸ் (டிக்கெட் தலைக்கு ரூ. 10), என நான்கு வகையான இருக்கை வசதிகளைக் கொண்டதாக இந்த தியேட்டர் உள்ளது.
இந்த தியேட்டரின் முக்கிய அம்சம், படுத்துக் கொண்டே படம் பார்க்கும் வசதி செய்யப்பட்டிருப்பதுதான். இந்த வசதி கொண்ட 25 இருக்கைகள் தியேட்டரில் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழத்தின் முதல் ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட தியேட்டர் இதுதான் என்று அபிராமி மெகா மால் உரிமையாளரும், சென்னை திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications