புதுவை: மீனவர்கள் கடும் மோதல்-துப்பாக்கிச் சூடு
புதுச்சேரி:புதுவை அருகே உள்ள வீராம்பட்டினம் கிராமத்தில் மீனவர்களின் இரு பிரிவினருக்கு இடையே பயங்கர மோதல் மூண்டது. இதையடுத்து போலீஸார், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மோதலைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வீராம்பட்டினத்தில் உள்ள வடக்குத் தெரு மற்றும் தெற்குத் தெரு ஆகியவற்றில் வசித்து வரும் மீனவர்களுக்கிடையே பெரும் கோஷ்டி மோதல் மூண்டது. இதையடுத்து இரு தரப்பினரும் கடற்கரையில் கூடி கற்களை வீசியும், பயங்கர ஆயுதங்களால் தாக்கியும் மோதிக் கொண்டனர்.
தகவல் அறிந்ததும் போலீஸார் அங்கு விரைந்தனர். தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர். ஆனால் அப்படியும் அவர்கள் கலையவில்லை. இதையடுத்து கண்ணீர்ப் புகை குண்டு வீசப்பட்டது. அதற்கும் கூட்டத்தினர் கட்டுப்படவில்லை.
இதையடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு போலீஸார் மீனவர்களை விரட்டியடித்தனர். இந்த மோதலால் வீராம்பட்டினம் கடற்கரையே போர்க்களம் போலக் காணப்பட்டது.
மோதலில் போலீஸார் உள்பட 12 பேர் காயமடைந்தனர். அனைவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.