டெல்லியில் வைர நகைகளைத் திருடிய பேராசிரியர் தம்பதி கைது
டெல்லி: டெல்லியில் நடந்த நகை கண்காட்சியின்போது வைர நகைகளைத் திருடிய பேராசிரியர் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி அசோகா ஹோட்டல் வளாகத்தில் அக்டோபர் 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை நகைக் கண்காட்சி நடந்தது. கண்காட்சிக்கு வருவோரைக் கண்காணிக்க ஆங்காங்கு கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
கண்காட்சியின் கடைசி தினமான அக்டோபர் 31ம் தேதியன்று, 7வது எண் கொண்ட ஸ்டாலில் ஒரு வைர நெக்லஸ் காணாமல் போனது. இதுகுறித்து கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் போலீஸில் புகார் செய்தனர்.
இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான நபர்கள் குறித்து போலீஸார் ஆராய்ந்தனர். அப்போது சம்பந்தப்பட்ட 7வது எண் ஸ்டாலில் ஒரு கணவனும், மனைவியும் வைர நெக்லஸைத் திருடுவது தெரிய வந்தது.
அந்த நபர் கடைக்காரரின் கவனத்தை திசை திருப்பி வைர நெக்லஸை தன்னுடன் வந்த பெண்ணிடம் கொடுக்கிறார். அந்தப் பெண் அதை வாங்கி தனது பர்ஸுக்குள் போட்டுக் கொள்கிறார்.
இந்த நிலையில் நகைக் கண்காட்சியை நடத்தியவர்கள் ஹோட்டல் பார்க் ராயலில் இன்னொரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்தக் கண்காட்சிக்கு எப்படியும் அந்த திருட்டுத் தம்பதி வரும் என்று போலீஸார் நம்பினர். இதையடுத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
அவர்கள் எதிர்பார்த்தது போலவே அந்த திருட்டுத் தம்பதியினர் இந்த கண்காட்சிக்கும் வந்திருந்தனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் கிரேட்டர் கைலாஷ் காலனியைச் சேர்ந்த சுனில் ஓரி (52), ஷோபனா (50) என்பதும், இருவரும் மிகப் பிரபலமான மேனேஜ்மென்ட் கல்லூரியில் பேராசிரியர்களாக உள்ளனர் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களது வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்து திருடப்பட்ட நெக்லஸை அவர்கள் மீட்டனர். விசாரணையின்போது அந்த பேராசிரியர் தம்பதி கூறுகையில், நகையை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது யாரும் கவனிக்கவில்லை. இதனால், திருடலாமே என்று எண்ணி நெக்லஸை எடுத்துக் கொண்டோம் என்று தெரிவித்துள்ளனர்.
இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் பின்னர் இருவரையும் சிறையில் அடைத்தனர்.