ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய கலெக்டர்
நாகை: நாகையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர் தீபாவளியைக் கொண்டாடினார்.
நாகப்பட்டினத்தில் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் பலர் உயிர், உடமைகளை இழந்தனர்.
சுனாமியில் சிக்கி உயிரிழந்த பலரின் குழந்தைகள் அனாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டனர். இப்படிப்பட்ட நிலையில் உள்ள 79 குழந்தைகள், சாமந்தான் பேட்டையில் உள்ள அன்னை சத்யா ஆதரவற்றோர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை மாவட்ட கலெக்டர் ஜவஹர் தனது குடும்பத்தாருடன் இங்கு சென்று சுனாமியால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளியைக் கொண்டாடத் திட்டமிட்டார்.
அதன்படி, தீபாவளி அன்று காலையில் சாமந்தான் பேட்டையில் உள்ள அன்னை சத்யா ஆதரவற்ற இல்லத்திற்கு தனது மனைவி, மகனுடன் சென்ற கலெக்டர் ஜவஹர், அந்த குழந்தைகளை கண்டு தூக்கி வைத்து அன்புடன் நலம் விசாரித்தார்.
பின்பு தான் கொண்டு வந்திருந்திருந்த புத்தாடைகள், இனிப்பு, கார வகைகள், பட்டாசு போன்றவற்றை குழந்தைகளுக்குக் கொடுத்து மகிழ்ந்தார்.
பட்டாசுகளைக் கொடுத்ததோடு இல்லாமல் குழந்தைகளோடு சேர்ந்து பட்டாசு வெடித்து கொண்டாடினார். இதனால் அன்னை சத்யா இல்லக் குழந்தைகள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர்.
ஆதரவற்றக் குழந்தைகளுடன் சேர்ந்து தீபாவளியைக் கொண்டாடியதன் மூலம் மனித நேயத்தை மலர வைத்துளளார் நாகை மாவட்ட கலெக்டர் ஜவஹர்.