திருச்செந்தூர்-பழனியில் கந்த சஷ்டி விழா!
திருச்செந்தூர்: முருகப் பெருமானின் அறுபடை வீடுகளிலும் இன்று கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முருகப் பெருமானின் திருத்தலங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் முக்கியமானத கந்த சஷ்டி திருவிழா. அனைத்து முருகன் தலங்களிலும் சஷ்டி விழா வெகு சிறப்பாக நடைபெறும். குறிப்பாக அறுபடை வீடுகளிலும் இந்த விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.
திருச்செந்தூரில் ..
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்கியது. இன்று காலை கொடியேற்றத்துடன் சஷ்டி விழா தொடங்கியது. வருகிற 16ம் தேதி வெள்ளிக்கிழமை விழா முடிகிறது. 15ம் தேதி வியாழக்கிழமை விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது.
இன்று காலை கோவில் நடை அதிகாலை 2.00 மணிக்கு திறக்கப்பட்டு 2.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடந்தது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
11ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) 2ம் நாள் திருவிழாவில் இருந்து 14ம் தேதி (புதன்கிழமை) 5ம் நாள் திருவிழா வரை கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறந்து அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூபம் நடக்கிறது.
சூரசம்ஹாரம்
16ம் தேதி (வியாழக்கிழமை) 6ம் நாள் அன்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சியையொட்டி கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறந்து 1.30 மணிக்கு விஸ்வரூபம் நடக்கிறது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெறும்.
அன்று பிற்பகல் 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்தி நாதர் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
சூரசம்ஹாரம் முடிந்த பிறகு சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி அம்பாள் கிரிப்பிரகார உலா வந்து திருக்கோவில் சேர்தல், தொடர்ந்து சாயாபிசேகம் முடிந்து சஷ்டி பூஜை தகடுகள் கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
திருக்கல்யாணம்:
16ம் தேதி (வெள்ளிக்கிழமை) 7ம் நாள் திருவிழா அன்று அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. விழாவையொட்டி கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறந்து 3.30 மணிக்கு விஸ்வரூபம் நடக்கிறது. காலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள் சேர்க்கையிலிருந்து தபசுக்கு புறப்படுதல், மாலை 5 மணியளவில் அம்பாளுக்கு சுவாமி காட்சி அருளி தோள்மாலை மாற்றுதல், இரவு தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.
தங்கரதம்
கந்தசஷ்டி திருவிழா நாட்களில் தினந்தோறும் காலை, மாலை யாகசாலை பூஜை நடைபெறும். பகலில் உச்சிகால பூஜை முடிந்து யாகசாலை தீபாராதனைக்கு பின்னர் யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் ெழுந்தருளி வீரவாள் வகுப்பு, வேல் வகுப்பு முதலிய பாடல்களுடன் மேளவாத்தியங்களுடன் சண்முகவிலாசம் சேர்ந்து தீபாராதனை நடைபெறும்.
1ம் நாள் திருவிழா முதல் வருகிற 14ம் தேதி 5ம் நாள் திருவிழா வரை மாலை 4.30 மணிக்கு திருவாடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி சுவாமி ஜெயந்திநாதர் தங்கரதத்தில் கிரிவீதி உலா வந்து திருக்கோவில் சேர்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
பழனியில் ..
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலிலும் இன்று கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாகத் தொடங்கியது.
இதேபோல சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலிலும் கந்த சஷ்டி விழா தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள இதர முருகன் தலங்களிலும் சஷ்டி விழா பூஜைகளுடன் தொடங்கியுள்ளது.