ஹஜ் செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமான டயர்களில் தீ
ஸ்ரீநகர்: இந்தியன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இன்று காலை ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது திடீரென்று டயர்களில் தீப்பிடித்துக் கொண்டது. அதிலிருந்த விமான ஊழியர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
டெல்லியிலிருந்து இந்தியன் (முன்பு இந்தியன் ஏர்லைன்ஸ்) விமான நிறுவனத்தின் ஏர் பஸ்-300 ரக விமானம் ஸ்ரீநகர் வந்தது. அங்கிருந்து ஹஜ் புனிதப் பயணிகளை செளதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்துச் செல்ல இருந்தது. இதனால் அந்த விமானத்தில் விமான ஊழியர்கள் மட்டுமே இருந்தனர்.
இந்த விமானம் தரையிறங்கும்போது அதன் டயர்கள் திடீரென்று தீப்பிடித்துக் கொண்டன. ஆனாலும் விமானத்தை சாதுர்யமாக பத்திரமாக தரையிறக்கினர் விமானிகள்.
இதையடுத்து விமானத்திற்குள் இருந்தவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.
இதையடுத்து விமானத்தின் டயர்கள் மாற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து அந்த விமானம் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த ஹஜ் யாத்ரீகர்கள் 220 பேருடன் ஜெட்டாவுக்கு கிளம்பிச் செல்ல உள்ளது.