பட்டா வழங்குவதில் இடைத் தரகர்கள்-சிபிஎம் புகார்
மதுரை: தமிழக அரசு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவதில் இடைத் தரகர்களின் தலையீடு மிக அதிகமாக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாவட்ட மாநாடு நேற்று தொடங்கியது. இதை வரதராஜன் தொடங்கி வைத்து பேசியதாவது,
மக்கள் ஒற்றுமையை சீர் குலைக்கும் வகையில் காங்கிரஸின் பொருளாதாரக் கொள்கை அமைந்துள்ளது.
இந்தியாவில் மதவெறி தலை தூக்க மார்க்சிஸ்ட் கட்சி ஒரு போதும் அனுமதிக்காது. மதவெறி ஆட்சி வந்து விடக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முன்னணி அரசை மார்க்சிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது.
அதே நேரத்தில் ஐக்கிய முன்னணி அரசின் குறைந்தபட்ச செயல் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும்.
அணு ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கூடாது என்று மக்களவையின் மக்கள் மன்றத்தில் வலியுறுத்துவோம். ஜெயலலிதா ஆட்சி நடந்த 5 ஆண்டும் சர்வாதிகார ஆட்சி தான் நடந்தது. அதை வீழ்த்தவே திமுகவுடன் கூட்டணி வைத்தோம்.
ஆனால் தமிழகத்தில் பொது மக்களுக்கு அரசு இலவச வீட்டு மனைபட்டா வழங்குவதில் இடைத் தரகர்களின் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளது. இதை அரசு தலையிட்டு உடனே தடுக்க வேண்டும் என்றார்.