மதமாற்ற சர்ச்சை - அய்யம்பேட்டையில் கடையடைப்பு
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண்களை சென்னைக்குக் கூட்டிச் சென்று மதம் மாற்றி விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதைக் கண்டித்து அங்கு இன்று கடையடைரப்புப் போராட்டம் நடந்து வருகிறது.
பாபநாசம் அருகே உள்ள அய்யம்பேட்டையில், விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது.
அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அம்பிகா, ஷர்மிளா, கலைச்செல்வி உள்ளிட்ட நான்கு பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை சென்னைக்குக் கூட்டிச் சென்று மதமாற்றம் செய்து விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மருத்துவமனை நிர்வாகம்தான் இந்த மதமாற்றத்திற்குக் காரணம் என அந்தப் பெண்களின் பெற்றோர்கள் புகார் கூறியுள்ளனர். இதுதொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் நிர்வாகி உள்ளிட்டோரைக் கைது செய்யக் கோரி பாமக, பாஜக, வர்த்தக அமைப்புகள் உள்ளிட்டவை இன்று அய்யம்பேட்டையில் கடையடைப்புப் போராட்டத்தில் குதித்துள்ளன. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
மதக் கலவரம் வெடித்து விடாமல் தடுக்க அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications