திமுகவை எந்த கொம்பனாலும் தொட முடியாது-ஸ்டாலின்
ஈரோடு: திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருநெல்வேலியில் அடுத்த மாதம் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் திமுக இளைஞரணியின் மாநில மாநாடு நடக்கவுள்ளது. இது தொடர்பாக மாவட்டவாரியாக திமுக இளைஞரணி கூட்டத்தை ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
ஈரோடு மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது,
இங்கு நாங்கள் ஆணையிடவோ, உத்தரவிடவோ, கட்டளையிடவோ அல்லது அறிவுரை கூறவோ வரவில்லை. இந்த கூட்டத்தின் நோக்கம் உங்களது உத்தரவுகளை, ஆணையை, அறிவுரையை கேட்க, உங்களுடன் இணைந்து உங்களில் ஒருவனாக பணியாற்ற இங்கு வந்துள்ளேன்.
இந்த கூட்டத்தை பார்க்கும்போது இது செயல்வீரர்கள் கூட்டமா அல்லது ஈரோடு மாவட்ட மாநாடா என்று சந்தேகப்படும் அளவுக்கு எழுச்சியுடன் நடக்கிறது. இதைப் பார்க்கும்போது இந்த இயக்கத்தை எந்தவொரு தீய சக்தியாலும், எந்த தீய கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது.
நெல்லை மாநாட்டுக்கு இங்கு ரூ.30 லட்சம் நிதி முதல் தவணையாக வழங்கப்பட்டுள்ளது. இதில் மற்ற மாவட்டங்களுக்கு முன்னோடியாக ஈரோடு மாவட்டம் விளங்குகிறது. மேலும் இந்த கூட்டத்தை எழுச்சியுடன் நடத்தியதிலும் நெல்லை இளைஞர் அணி மாநாட்டில், எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் என்பதை நகரம், ஒன்றியம் வாரியாக பெயருடன் கூறியிருப்பதிலும் இந்த மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.
இந்த இயக்கம் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல. எந்த கட்சிக்கும் இல்லாத தியாக வரலாறு திமுகவுக்கு உண்டு.
இப்போது புதிய புதிய கட்சிகள் திடீர் திடீரென்று வந்து கொண்டிருக்கின்றன. அந்த கட்சியின் தலைவர்கள் அடுத்து நான் தான் முதல்வர் என்றும் ஏதோ அந்த பதவி அவர்களுக்காக காத்துக் கொண்டிருப்பது போல பேசுகிறார்கள்.
கட்சி தொடங்குவதற்கு முன்பே நான்தான் முதல்வர் என்று கூறும் அளவுக்கு அரசியல் நாகரீகம் நாட்டில் வளர்ந்து வருகிறது. அந்த தலைவர்களுக்கு கொள்கை, குறிக்கோள், லட்சியம், தகுதி ஏதாவது உள்ளதா.
கடந்த 1949ம் ஆண்டு அண்ணா இந்த இயக்கத்தை தொடங்கியபோது இந்த இயக்கம் பதவி சிம்மாசனத்துக்கு வர வேண்டும் என்று சொல்லவில்லை. ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்காக, ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்காக இந்த இயக்கத்தை உருவாக்கினார்.
நாட்டு மக்களுக்கு உழைக்கும் உன்னதமான இயக்கம் திமுக தான். இந்த இயக்கத்தில் உள்ளவர்கள் எந்த பதவிக்கும் ஆசைப்படுவதில்லை. பதவியை தேடி நாம் செல்லவில்லை. நம்மை தேடி பதவிகள் வரவேண்டும், அது தான் என்றும் நிலைத்து நிற்கும்.
நெல்லை இளைஞரணி மாநாட்டில் நடக்கும் அணிவகுப்பில் கலந்து கொள்ள, மாவட்டந்தோறும் திடகாத்திரமாக உள்ள 100 பேரை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்க வேண்டும். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி அல்லது உடற்பயிற்சி அதிகாரிகளை வைத்து இந்த பயிற்சியை கொடுக்கலாம். சிறந்த அணிக்கு பரிசு வழங்கப்படும்.
தனது 84 வயதிலும் முதலமைச்சர் கருணாநிதி தள்ளாடி தள்ளாடி உழைத்து வருகிறார். தமிழ்நாடு தள்ளாடிவிடக் கூடாது என்பதற்காகத்தான் அவர் மக்களுக்காக உழைத்து வருகிறார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைத்து வரும் ஒரே கட்சி திமுக தான் என்றார் ஸ்டாலின்.