கொல்ல தூண்டியது விஷ்ணுபிரசாத் தான்: 'மயூரா'
சென்னை: சத்தியமூர்த்தி பவனில் வைத்து என்னை கொல்ல அடியாட்களை அனுப்பியது விஷ்ணுபிரசாத் தான் என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை, சத்தியமூர்த்தி பவனில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் இருக்கும்போதே அடையாளம் தெரியாத கும்பல் அதிரடியாக புகுந்து மயூரா ஜெயக்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது.
இந் நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயக்குமார் கூறியதாவது,
பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள சைதை வில்லியம் கடந்த ஒன்றரை வருடங்களாக இளைஞர் காங்கிரஸ் வளர்ச்சி பணிகள் எதையும் செய்யவில்லை. கட்சி நிகழ்ச்சி எதையும் நடத்தவில்லை.
மாவட்ட வாரியாக தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. ஆனால் உறுப்பினர் படிவம் ஒன்றுகூட வாங்கவில்லை. இதன் காரணமாக ராகுல் காந்தி ஒப்புதலுடன் 6 மாவட்ட தலைவர்களை அகில இந்திய காங்கிரஸ் தலைமை நீக்கியுள்ளது.
அப்படி நீக்கப்பட்டவர்களில் சைதை வில்லியம்சும் ஒருவராவார். நேற்று சத்தியமூர்த்தி பவனில் உள்ள எனது அலுவலகத்தில் நான் இருந்தபோது, சைதை வில்லியம்ஸ் தனது அடியாட்களுடன் என்னை தாக்க வந்தார்.
உடனே நான் விஷ்ணுபிரசாத்திடம் பேசிக் கொள்ளலாம் என்று சமாதானப்படுத்தியதற்கு, விஷ்ணுபிரசாத் சொல்லித் தாண்டா உன்னை போடுறேன் என்று ஆவேசத்துடன் கத்தியால் தலையில் வெட்டினார். மீண்டும் அவர் தலையில் வெட்டும்போது கையால் தடுத்ததால் கையில் வெட்டு விழுந்தது. மேலும் எனது தோள்பட்டையிலும் வெட்டினார்.
அவருடன் வந்த கும்பல், என் அறையில் இருந்த கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கண்மூடித்தனமாக தாக்கிவிட்டு, அலுவலகத்தை சூறையாடி விட்டனர் என்றார் மயூரா ஜெயக்குமார்.
மயூரா ஜெயக்குமாரை அடியாட்கள் வைத்து தாக்கிய விஷ்ணுகுமார் எம்.எல்.ஏ மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக விஷ்ணுபிரசாத்தை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை.
விஷ்ணுபிரசாத்தை கைது செய்யக்கோரி போராட்டம்:
விஷ்ணுபிரசாத்தை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விஷ்ணுபிரசாத்தை போலீசார் கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று காங்கிரசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை உட்பட முக்கிய நகரங்களிலும் தீவிர போராட்டம் நடத்த சத்தியமூர்த்தி பவனில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
விஷ்ணுபிரசாத் முன்ஜாமீன் கேட்டு மனு:
இந்த தாக்குதல் சம்பவத்தில் முதல் குற்றவாளியாக போலீசார் விஷ்ணுபிரசாத் எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் தன்னை போலீசார் கைது செய்வதற்கு முன்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு விஷ்ணுபிரசாத் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து இன்று மதியம் விசாரிக்க வேண்டும் என்று விஷ்ணுபிரசாத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுப்ரமணி கேட்டுக் கொண்டார். ஆனால் நீதிபதி சுதந்திரம், மனு மீதான விசாரணை நாளை (13ம் தேதி) நடக்கும் என்று அறிவித்தார்.
இந்த தாக்குதல் தொடர்பாக சைதை வில்லியம்ஸ், மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நேற்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராகுல் காந்தி கண்டனம்:
மயூரா ஜெயக்குமார் கட்சி தலைமை அலுவலகத்திலேயே தாக்கப்பட்ட இந்த சம்பவத்திற்கு ராகுல் காந்தி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வருக்கு ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். இதைக் தொடர்ந்து அசோக்தன்வர் சென்னை வந்து விசாரணை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications