தமிழ்ச்செல்வன் இரங்கல் ஊர்வலம்: வைகோ-நெடுமாறன் கைது
சென்னை: சென்னையில் இன்று போலீஸ் தடையை மீறி நடத்தப்பட்ட தமிழ்ச்செல்வன் இரங்கல் ஊர்வலத்தில் கலந்து கொண்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உட்பட நூற்றுக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.
விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவுத் தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் இலங்கை ராணுவ விமான குண்டுவீச்சில் கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று சென்னையில் மெளன ஊர்வலம் நடக்கும் என நெடுமாறன் அறிவித்திருந்தார்.
இதில் தானும் பங்கேற்கவுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருந்தார்.
ஆனால், இந்த ஊர்வலத்திற்கு சென்னை காவல்துறை அனுமதி தர மறுத்துவிட்டது. இந்நிலையில் தடையை மீறி இந்த ஊர்வலம் நடக்கும் என நெடுமாறன் அறிவிக்கப்பட்டதால், ஊர்வலம் தொடங்கவுள்ள மன்றோ சிலை பகுதியை சுற்றிலும் இன்று காலை முதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இன்று பிற்பகலில் இருந்து மதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழர் தேசிய இயக்க தொண்டர்கள் ஏராளமானோர் இரங்கல் ஊர்வலத்தில் கலந்து கொள்ள மன்றோ சிலை பகுதியில் குவிந்தனர்.
இந்த நிலையில் அறிவித்தபடி மாலை 4 மணியளவில் பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பேரணியைத் தொடங்கினர்.
ஆனால் அவர்களை மேற்கொண்டு செல்ல விடாமல் தடுத்த போலீஸார் அனைவரையும் கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
முன்னதாக இந்தப் பேரணி நடக்கவிருந்த புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான தமிழ்ச்செல்வனின் படங்கள், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.