பாஜக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு: கெளடா புது முடிவு
பெங்களூர்: எந்த மகனுக்கு துணை முதல்வர் பதவியைத் தருவது என்பதில் ஏற்பட்ட குடும்பக் குழப்பத்தால், கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சி தரும் வகையில், பாஜக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவது என்ற முடிவை மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவெ கெளடா எடுத்துள்ளார். இதனால் கட்சி உடையக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கர்நாடகத்தில் பாஜக புதிதாக ஆட்சி அமைத்துள்ளது. எதியூரப்பா முதல்வாரகியுள்ளார். நேற்று நடந்த அமைச்சரவை பதவியேற்பு விழாவின்போது, மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த யாரும் பதவியேற்கவில்லை.
துணை முதல்வர் பதவி தொடர்பாக கெளடாவின் மகன்களான முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கும், ரேவண்ணாவுக்கும் இடையே பனிப்போர் நடப்பதால் கெளடா பெரும் குழப்பத்தில் இருந்து வருகிறார்.
குமாரசாமியை துணை முதல்வராக்க கெளடா ஆதரவு தெரிவித்துள்ளார். கட்சி எம்.எல்.ஏக்கள் பெரும்பாலானோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் ரேவண்ணாவை துணை முதல்வராக்க வேண்டும் என கெளடா குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இதனால் கெளடாவுக்கு பெரும் குழப்பமாகி விட்டது. யாரை துணை முதல்வராக்கினாலும், இன்னொரு மகனின் துவேஷத்தை சந்திக்க நேரிடும் என்பதால், இந்தக் குழப்பத்தைத் தீர்க்க, பாஜக அமைச்சரவையில் சேருவதில்லை, வெளியிலிருந்து ஆதரவு தரும் முடிவை அவர் எடுத்துள்ளார்.
இதனால் அமைச்சர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்கள் பெரும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
இதனால் அதிருப்தி எம்.எல்.ஏக்களால் கட்சி உடையும் ஆபத்தும் ஏற்பட்டிருப்பதாக கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் புதிய குழப்பத்தால், வருகிற 23ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும்போது சிக்கல் ஏற்படலாமோ என்ற அச்சத்தில் பாஜகவும் உள்ளது.