கம்ப்யூட்டர்களை ஓரம் கட்டுமா மொபைல் போன்?
மும்பை: செல்போன் புரட்சியில் இந்தியா முழு வீச்சில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் 80.5 லட்சம் செல்போன் பயன்பாட்டாளர்கள் சேர்ந்து கொண்டே உள்ளனர். பல்வேறு வெளிநாட்டு செல்போன் நிறுவனங்கள் இந்தியாவில் குவிந்துகொண்டே உள்ளன.
இன்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் செல்போன்களைப் பயன்படுத்துகின்றனர். கிட்டத்தட்ட 3.1 கோடி செல்போன் பயன்பாட்டாளர்கள், தங்களது மொபைல் போன்கள் மூலம் இன்டர்நெட்டைப் பயன்படுத்துகின்றனர்.
இதன் காரணமாக கம்ப்யூட்டர்கள் முலம் இன்டர்நெட்டை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து 4வது திரை (வெள்ளித்திரை, சின்னத்திரை மற்றும் கம்ப்யூட்டர் வரிசையில்) எனப்படும் செல்போன் மூலம் இன்டர்நெட்டை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
செல்போன்கள், கம்ப்யூட்டர்களை ஓரம் கட்டி விடுமா என்ற கேள்வி இதன் மூலம் எழுகிறது. ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றே கூறலாம். இரண்டுமே ஒன்றை ஒன்று சார்ந்து தொடரும் என்பதே உண்மை.
இந்தியாவில் ஏற்பட்டு வரும் இந்த வயர்லஸ் புரட்சி குறித்து தி எக்கனாமிஸ்ட் பத்திரிக்கையில், ராஜேஷ் ஜெயின் எழுதியுள்ள கட்டுரை இதை வெளிப்படுத்துகிறது.
மும்பையைச் சேர்ந்த ராஜேஷ் ஜெயின் ஒரு சிறு முதலீட்டாளர். இவரது நம்பிக்கை என்னவென்றால், என்னதான் அதி நவீன இன்டர்நெட் செல்போன்கள் வந்தாலும் கூட கம்ப்யூட்டரை ஓரம் கட்ட முடியாது என்பதுதான்.
ஒவ்வொரு நகர்ப்புற மனிதருக்கும் கண்டிப்பாக இரு 'திரைகள்' அவசியம் என்கிறார் இவர். ஒன்று செல்போன், மற்றொன்று கம்ப்யூட்டர். இவை இரண்டுமே கண்டிப்பாக அவர்களுக்குத் தேவைப்படுவதாக ஜெயின் கூறுகிறார். அதாவது இரண்டுமே இரண்டு கண்கள் என்பது அவரது எண்ணம்.
2003ம் ஆண்டு ஜெயின், சென்னை ஐஐடி பேராசிரியர் அசோக் ஜூன்ஜூன்வாலாவுடன் இணைந்து நெட் பிசியை உருவாக்கினார். மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து நோவேசியம் என்ற நிறுவனத்தையும் ஆரம்பித்தனர். இந்த நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் டெல்லியில் இந்த நெட் பிசியை அறிமுகப்படுத்தியது.
இந்த நெட் பிசியின் விலை ரூ. 1999 மட்டுமே. கூடுதலாக ஒரு மானிட்டர் தேவை என்றால் ரூ. 3000 கூடுதலாக செலவிட வேண்டும். ஒரு மொபைல் போனிலிருந்து சிப் அடங்கிய எளிய, கருவியின் மூலம் இந்த நெட் பிசி செயல்படுகிறது. இதை டிவி மாதிரி ஆன் செய்து கொள்ளலாம். மாதம் ரூ. 399 செலவழித்து, இதன் மூலம் இன்டர்நெட் தொடர்பைப் பெற்றுப் பயன்படுத்தலாம்.
மொபைல் தொலைபேசியின் வெற்றியிலிருந்து பல பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ளார் ஜெயின். இவருடைய கண்டுபிடிப்பான இந்த நெட் பிசி பயன்படுத்த மிக எளிதாக உள்ளது மட்டுமின்றி, விலைக்குறைவாகவும் உள்ளது.
வழக்கமான பெரிய சைஸ் கம்ப்யூட்டர்களை விரும்புவோருக்கு இந்த குட்டி பிசி திருப்தியைக் கொடுக்காமல் போகலாம். இருப்பினும் இந்த குட்டி நெட் பிசியின் பயன்பாடு படு சிறப்பாக உள்ளதால் இதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
மொபைல் இன்டர்நெட் மூலம் கிரிக்கெட் ஸ்கோர், செய்திகள், தட்பவெப்ப நிலை, டிவி நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொள்ள முடியும். அது எளிதானதாகவும் உள்ளது.
இந்த வகையில் ஒன்இந்தியா.இன், தனது மொபைல் போர்ட்டல்கள் மூலம் அவரவர் மொழியில் செய்திகள் உள்ளிட்டவற்றை மொபைல் போன்கள் மூலம் அறிந்து கொள்ள வசதி செய்துள்ளது. Oneindia.mobi இணையதளத்திற்குச் சென்றால், இதன் இலகுவான பயன்பாட்டைப் புரிந்து கொள்ளலாம்.
இன்று மொபைல் பயன்பாடு என்பது பெருநகரங்களைப் போலவே, இரண்டாம் நிலை நகரங்களிலும் அதிகரித்து விட்டது. எனவே இந்த நகரங்களிலும் உள்ள மொபைல் பயன்பாட்டாளர்ளுக்கு நாம் இதுபோன்ற சேவைகளை செய்ய வேண்டியது அவசியமாகிறது.
இதில் உள்ள ஒரு குறை என்னவென்றால் பிராந்திய மொழிகளுக்கான பான்ட்தான் (எழுத்துரு). இருப்பினும் இதையும் கூட எளிதில் சரி செய்ய முடியும். 7 ஆண்டுகளுக்கு முன்பு இந்த எழுத்துரு பிரச்சினை ஒன்இந்தியா.இன் இணையத் தளங்களுக்கும் ஏற்பட்டது. இருப்பினும், இப்போது யூனிகோட் மிகவும் பிரபலமாக இருப்பதாலும், பல்வேறு சவுகரியங்கள் அதில் இருப்பதாலும், அந்தப் பிரச்சினையை கடந்து விட்டது ஒன்இந்தியா.இன்
அன்று வந்த அதே போன்ற பிரச்சினைதான் மொபைல் போன்களிலும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதைச் சமாளிக்கவும், பல்வேறு வசதிகளும், வழிகளும், தொழில்நுட்பங்களும் உருவாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications