வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் வரதட்சணை கொடுமையால் இளம் பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்காசி ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.
நெல்லை மாவட்டம், வாசுதேவநல்லூர், நாயுடு தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் ரமேஷ். இவருக்கும், திருவனந்தபுரம் நெடுமன் காட்டை சேர்ந்த மணி மகள் லிசாவுக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
ரமேஷ் எர்ணாகுளத்தில் ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் கோகுலகிருஷ்ணன் என்ற மகன் உள்ளான். கடந்த வாரம் தீபாவளி கொண்டாட ரமேஷ் வாசுதேவநல்லூர் வந்தார்.
வெளியில் கடைக்கு சென்ற ரமேஷ் வீட்டிற்கு திரும்பினார்.
அப்போது வீட்டில் உள்ள மின்விசிறியில் லிசா தூக்கில் தொங்கியதை கண்டு ரமேஷ் அதிர்ச்சியடைந்தார். அருகில் சென்று பார்த்தபோது அவர் இறந்திருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து லிஷாவின் அண்ணன் ராபர்ட் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தனது தங்கையின் திருமணத்தின் போது ரூ.50 ஆயிரம் கொடுப்பதாக கூறியிருந்தோம். அதைக் கொடுக்க முடியவில்லை. இதனால் லிசாவை ரமேஷூம், அவரது குடும்பத்தாரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் லிசா தற்கொலை செய்து கொண்டதாக நான் சந்தேகிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதனால் லிசா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று தென்காசி ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.