விஜயகாந்த், சரத்குமாருடன் கூட்டணி: கார்த்திக்
திருநெல்வேலி: விஜயகாந்த், சரத்குமார் கட்சிகளுடன் பார்வர்டு பிளாக் கட்சி கூட்டணி அமைத்துக் கொண்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன் என்று தமிழக பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி
சென்னை, நெல்லையில் முத்துராமலிங்கத் தேவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். சங்கரன்கோவிலில் தேவர் சிலை உடைப்பு சம்பவத்தை தொடர்ந்து திட்டமிட்டு சிலர் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த கலவரத்தில் அப்பாவி மக்கள் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்து அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.
நெல்லையில் வரும் டிசம்பர் மாத இறுதியிலோ அல்லது ஜனவரி மாதம் முதல் வாரத்திலோ பார்வர்டு பிளாக் கட்சியின் மாநாடு நடைபெறும்.
சமீபத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மதுரையில் என்னை சந்தித்தார். அப்போது நாங்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம்.
விஜயகாந்த், சரத்குமார், நான் ஒரே மனநிலை மற்றும் ஒரே கொள்கை உடையவர்கள். அரசியலில் எதுவும் நடக்கலாம். தேமுதிக மற்றும் அஇசமகவுடன் பார்வர்ட் பிளாக் கட்சிக்கு கூட்டணி ஏற்பட்டாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன் என்றார் கார்த்திக்.
போலீஸ் குழப்பம்:
சங்கரன்கோவில் அருகேயுள்ள வேலாயுதபுரத்தில் தேவர் சிலை உடைப்பை பார்வையிட வந்த கார்த்திக்கிற்கு போலீசார் தடை விதித்தனர். இருப்பினும் அவர் இன்னும் ஊர் திரும்பாமல் நெல்லையிலேயே முகாமிட்டு திடீர் திடீரென்று பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
அவருடைய நிகழ்ச்சி திட்டம் குறித்து எதுவும் தெரியாமல் போலீசாருக்கு பெரும் குழப்பமாக உள்ளது.












Click it and Unblock the Notifications