விமான டயர் வெடித்தது - இல.கணேசன் உள்ளிட்டோர் தப்பினர்
சென்னை: பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்த விமானம், தரையிறங்கும்போது டயர் வெடித்ததால் நிலை தடுமாறி ஓடியது. இருப்பினும் விமானி சாதுர்யமாக விமானத்தை நிறுத்தியதால் அதில் இருந்த பாஜக தலைவர் இல.கணேசன் உள்ளிட்ட 54 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கர்நாடகத்தில் பாஜக அரசு பதவியேற்ற விழாவில் கலந்து கொள்வதற்காக பெங்களூர் சென்றிருந்த தமிழக பாஜக தலைவர் இல.கணேசன், நேற்று இரவு கிங்பிஷர் விமானம் மூலம் சென்னை திரும்பினார். விமானத்தில் மொத்தம் 54 பயணிகள் பயணித்தனர்.
விமானம் இரவு எட்டரை மணியளவில் சென்னை வந்து சேர்ந்தது. தரையிறங்கியபோது திடீரென பின் பக்க டயர் ஒன்று வெடித்தது. இதனால் விமானம் குலுங்கி நிலை தடுமாறியது. இருப்பினும் விமான சாதுரியமாக செயல்பட்டு விமானத்தை நிறுத்தி விட்டார்.
விமானத்தின் டயர் வெடித்ததால் பயணிகள் குண்டு வெடித்து விட்டதோ என்று பயந்தனர். ஆனால் டயர் வெடித்ததாக விமான ஊழியர்கள் தெளிவுபடுத்தியதால் பீதி அகன்றனர்.
பின்னர் தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து விமானத்தின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே இருந்து பயணிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
பிறகு பயணிகள் அனைவரும் பாட்டரி கார்கள் மூலம் விமான நிலைய பயணிகள் வருகைப் பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் பயணிகள் தங்களது இருப்பிடங்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.